Published : 12 Jan 2022 06:55 PM
Last Updated : 12 Jan 2022 06:55 PM

சிறப்புப் பட்ட மேற்படிப்பு மருத்துவப் படிப்புகளிலும் 50% இட ஒதுக்கீடு; அரசாணை 462-ஐ அமல்படுத்த உயர் நீதிமன்றம் உத்தரவு: SDPGA சங்கம் வரவேற்பு

சென்னை: அரசு மருத்துவர்கள் மற்றும் சிறப்புப் பட்ட மேற்படிப்பு மருத்துவர்கள் சங்கம் (SDPGA) தொடர்ந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், அரசாணை 462-ஐ அமல்படுத்த உத்தரவிட்டுள்ளது. இதனை அச்சங்கம் வரவேற்றுள்ளது.

இது தொடர்பாக அரசு மருத்துவர்கள் மற்றும் சிறப்பு பட்ட மேற்ப்படிப்பு மருத்துவர்கள் சங்கம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ''அரசு மருத்துவர்களின் நீண்ட நாள் கோரிக்கையான பட்ட மேற்படிப்பு (MD/MS) மற்றும் சிறப்புப் பட்ட மேற்படிப்பு (DM/MCH) படிப்புகளில் அரசு மருத்துவர்களுக்கு ஏற்கெனவே வழங்கி வந்த 50 சதவீத இட ஒதுக்கீட்டை வழங்க வேண்டும் என்ற கோரிக்கையைப் பட்ட மேற்படிப்பிற்கும் வழங்க ஆணையிட்டு உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருந்தது.

இதனைத் தொடர்ந்து சிறப்புப் பட்ட மேற்படிப்பு மருத்துவப் படிப்புகளிலும் 50 சதவீத இட ஒதுக்கீட்டை அரசு மருத்துவர்களுக்கு வழங்க வேண்டும் என்று சென்ற வருடம் சட்டப் போராட்டங்களை உயர் நீதிமன்றத்தில் SDPGA நடத்தியது. இதன் விளைவாக அரசாணை 462 அரசாணை தமிழக அரசால் வெளியிடப்பட்டு சிறப்புப் பட்ட மேற்படிப்பு மருத்துவப் படிப்புகளுக்கு 50 சதவீத இட ஒதுக்கீட்டை வழங்க முன்வந்தது. அதனை ஒப்புக்கொண்ட உயர் நீதிமன்றம் உடனடியாகச் செயல்படுத்த ஆணை பிறப்பித்தது. தமிழக அரசு மருத்துவக்கல்வி இயக்குநர் மூலம் நடைமுறைப்படுத்த முன்வந்தது.

வெளி மாநில மருத்துவர்கள் உச்ச நீதிமன்றம் சென்று மேல்முறையீடு செய்து அரசாணைக்குத் தடையாணை பெற்றதால் சென்ற ஆண்டு அதனை நடைமுறைப்படுத்த இயலவில்லை. ஆனால், சென்ற ஆண்டு உச்ச நீதிமன்றம் அதன் தீர்ப்பில் அந்த ஆணை அந்த வருடத்திற்கு மட்டுமே செல்லும். அடுத்த வருடத்திற்கு இந்த அரசாணை பற்றி முடிவு எடுக்கப்படும் என்று வழக்கு நிலுவையில் வைக்கப்பட்டது.

அரசு மருத்துவர்கள் மற்றும் சிறப்புப் பட்ட மேற்படிப்பு மருத்துவர்கள் சங்கம் சார்பாக இந்த வழக்கைத் தொடர்ந்து நடத்த முடிவெடுத்து மீண்டும் உயர் நீதிமன்றத்தில் அரசாணை 462-ஐ நடைமுறைப்படுத்த வேண்டி வழக்குத் தொடர்ந்தது. SDPGA தொடர்ந்த வழக்கில் இன்று 462 அரசாணையை அமல்படுத்த ஆணையிட்டு உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. இந்தச் சட்டப் போராட்டத்திற்கு உறுதுணையாக இருந்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகளை SDPGA தெரிவித்துக் கொள்கிறது.

வரலாற்றுச் சிறப்புமிக்க உத்தரவை உயர் நீதிமன்றம் பிறப்பித்துள்ளதைத் தொடர்ந்து சமீபத்தில் நடைபெற்ற NEET, SS உள்ளிட்ட தேர்வில் வெற்றி பெறும் அரசு மருத்துவர்களுக்கு 50 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்க தமிழக அரசு தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். மேலும் இந்தத் தீர்ப்பை எதிர்த்துக் கடந்த ஆண்டு போல உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செல்ல நேரிட்டால் தமிழக அரசு வலுவாக சட்டப் போராட்டம் நடத்தி மாநில உரிமையை நிலைநாட்ட வேண்டும் என்ற கோ‌ரி‌க்கையும் வைக்கப்படுகிறது'' எனத் தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x