Published : 12 Jan 2022 01:32 PM
Last Updated : 12 Jan 2022 01:32 PM

மனநலம் பாதிக்கப்பட்டோரை மீட்டு மறுவாழ்வளிக்கும் தன்னார்வ அமைப்பினர்: கோவையில் 6 மாதங்களில் 80 பேர் மீட்பு

கோவையில் சாலையோரம் ஆதரவற்ற நிலையில் வசிக்கும் மனநலம் பாதிக்கப்பட்டோரை மீட்டு அவர்களை பராமரித்து, மறுவாழ்வு அளிக்கும் பணியில் தன்னார்வ அமைப்பினர் ஈடுபட்டு வருகின்றனர்.

கோவை மேட்டுப்பாளையம் பழைய நகராட்சி அலுவலக கட்டிடத்தில் ஆதரவற்றோர் மீட்பு, பராமரிப்பு மையம் கடந்தாண்டு ஜூன் முதல் செயல்பட்டு வருகிறது. மாவட்ட நிர்வாகம், மேட்டுப்பாளையம் நகராட்சி ஆகியவற்றுடன் இணைந்து மன நலம் பாதிக்கப்பட்டவர்களை ‘ஹெல்பிங் ஹார்ட்ஸ்’ என்ற தன்னார்வ தொண்டு அமைப்பினர் மீட்டு இங்கு பராமரித்து வருகின்றனர். இந்த மையம் மூலம் கோவை மாவட்டத்தில் கடந்த 6 மாதங்களில் 80-க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ளனர். இதில், தற்போதுவரை 9 பேர் அவர்களின் குடும்பத்துடன் மீண்டும் சேர்த்து வைக்கப்பட்டுள்ளனர். இந்த மையத்தை மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் பார்வையிட்டார்.

இதுதொடர்பாக, ‘ஹெல்பிங் ஹார்ட்ஸ்’ நிறுவனர் கணேஷ் முத்து கூறியதாவது: மீட்கப்படுவோரை பராமரிக்க 50 படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. அவர்களுக்கு தேவையான மருத்துவ உதவி, உணவு வழங்கி இங்கு பராமரித்து வருகிறோம். இதுவரை 80-க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ளனர். அவர்களில் தங்களது தேவைகளை தாங்களே செய்யும் நிலையை அடைந்த 30-க்கும் மேற்பட்டோர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதில், சென்னை, திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த 9 பேரின் குடும்பத்தினரை கண்டுபிடித்து அவர்களிடம் சேர்த்துள்ளோம். மீதமுள்ளவர்கள் இலவச முதியோர் இல்லங்கள், பராமரிப்பு மையங்களில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

தற்போது 42 பேர் பராமரிக்கப்பட்டு வருகின்றனர். இதுவரை மீட்கப்பட்டவர்களில் 50 சதவீதம் பேர் வெளிமாவட்டங்களைச் சேர்ந்தவர்கள், 5 முதல் 10 சதவீதம் பேர் வெளிமாநிலங்களைச் சேர்ந்தவர்கள். மீட்கப்பட்டோருக்கான பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள பாதுகாவலர்கள், சத்தான உணவு ஆகிய அடிப்படை வசதிகளுடன் மன நல மருத்துவர்களின் ஆலோசனை, யோகா பயிற்சி, உடற்பயிற்சிகள் ஆகியவை வழங்கப்படுகின்றன. செவிலியர்கள், பராமரிப்பாளர்கள் என மொத்தம் 17 பேர் இந்த மையத்தில் பணிபுரிந்து வருகின்றனர்.

மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனை, மாவட்ட சுகாதாரத்துறை ஆகியவை தேவையான மருத்துவ உதவியை வழங்கி வருகின்றன. மேட்டுப்பாளையம் நகராட்சி சார்பில் மையத்துக்கான கட்டிடம் வழங்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள் யாரேனும் தங்கள் பகுதியில் சாலையோரம் ஆதரவற்ற நிலையில் மன நலம் பாதிக்கப்பட்டோர் இருப்பதை அறிந்தால் 63747 13771 என்ற எண்ணில் தொடர்புகொண்டு தகவல் தெரிவிக்கலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x