Published : 11 Apr 2016 07:53 AM
Last Updated : 11 Apr 2016 07:53 AM
அதிமுக கூட்டணியில் இருந்து தமிழக வாழ்வுரிமை கட்சி விலகியுள்ளது.
இது தொடர்பாக அக்கட்சியின் தலைவர் பண்ருட்டி வேல்முருகன், சென்னையில் நிருபர்களிடம் நேற்று கூறியதாவது: கூட்டணி தொடர்பாக முதல்வர் ஜெயலலிதாவை 2 முறை சந்தித்து பேசினேன். தொடர்ந்து, அவர் கூறியபடி அமைச்சர்களையும் பலமுறை சந்தித்து பேசினேன். வாழ்வுரிமை கட்சி சார்பில் முதலில் இரட்டை இலக்க தொகுதி கேட்கப்பட்டது. இறுதியாக தமிழகத்தில் 5, புதுச்சேரியில் 1 தொகுதி கேட்டோம்.
இந்நிலையில், சமீபத்தில் வெளியான அதிமுக வேட்பாளர் பட்டியலில் எங்கள் கட்சி இடம் பெறவில்லை. அதன்பிறகும் பலமுறை தொடர்ந்து பேசினோம். எங்கள் கட்சி தனிச் சின்னத்தில் போட்டியிடுவதற்கும் அதிமுக உடன்படவில்லை. என்னை கூட்டணி தலைவராக நினைத்திருந்தால், நாளை (11-ம் தேதி) விருதாச்சலத்தில் நடக்கும் கூட்டத்துக்கு அழைத்திருப்பார்கள். ஆனால் அழைக்கவில்லை. எனவே, அதிமுக கூட்டணியில் இருந்து விலகுகிறேன். திமுக, மக்கள் நலக் கூட்டணியில் இருந்து அழைப்பு வந்தபோதும் அவர்களிடம் பேசவில்லை. எனது அடுத்தகட்ட முடிவை நெய்வேலியில் 12-ம் தேதி நடக்கும் பொதுக்குழு கூட்டத்தில் அறிவிப்பேன். மீண்டும் ஜெயலலிதாவிடம் இருந்து நேரடியாக அழைப்பு வந்தாலும் பொதுக்குழு கூட்டத்தில் பேசித்தான் முடிவெடுப்பேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT