Published : 11 Jan 2022 06:03 PM
Last Updated : 11 Jan 2022 06:03 PM

'அனைவருமே ஊழல்வாதிகள்' - அறநிலையத் துறை மீது ஹெச்.ராஜா விமர்சனம்

கரூர்: 2024-ம் ஆண்டிலும் மோடிதான் ஆட்சிக்கு வருவார் என பாஜக முன்னாள் தேசியத் தலைவர் ஹெச்.ராஜா கருத்து தெரிவித்தார். மேலும், அனைவருமே ஊழல்வாதிகள் என்று அறநிலையத் துறை மீது அவர் குற்றம்சாட்டினார்.

பிரதமர் மோடியின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்திய பஞ்சாப் மாநில காங்கிரஸ் அரசு மற்றும் கரூர் நகர காவல்துறையைக் கண்டிப்பதாகக் கூறி கரூர் மாவட்ட பாஜக சார்பில் மாவட்ட தலைவர் வி.வி.செந்தில்நாதன் தலைமையில் கரூர் வட்டாட்சியர் அலுவலகம் முன் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று (ஜன.11) நடைபெற்றது. பாஜகவின் முன்னாள் தேசிய செயலாளர் ஹெச்.ராஜா கண்டன உரையில் பேசியது: ”தமிழகத்தில் நடக்கும் இந்த அரசை விடியல் அரசு எனக்கூறுவதை விட, விடியா அரசு என்பது சரியாக இருக்கும்.

பஞ்சாப்பில் பிரதமர் மோடியை கொல்ல முயற்சி நடந்துள்ளது. தமிழக முதல்வர் அதனை கண்டித்து அறிக்கை வெளியிடவில்லை. இங்கு நல்லாட்சி இருக்கிறதா? 1 லட்சம் வேலைவாய்ப்பை தொடங்கி வைக்க வந்த பிரதமர் மோடிக்கு கருப்புக்கொடி காட்டியவர்கள்தான் இன்றைய ஆட்சியாளர்கள். தமிழ், தமிழர், தமிழக நலனுக்கு விரோதிகள். தேச விரோதிகள். மத்திய அரசுக்கு எதிரான மனநிலை கொண்டவர்கள்.

பஞ்சாப்பில் நிகழாண்டு விவசாய உற்பத்தி அதிகரித்துள்ளது. விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபடும்போது எப்படி உற்பத்தி அதிகரிக்கும். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் இடைத்தரகர்களும், அந்நியர்களும்தான்.

அறநிலையத்துறை என் மீது வழக்குகள் தொடுக்கிறது. அவர்கள் அனைவருமே ஊழல்வாதிகள். யாராவது யோக்கியமானவர் இருந்தால் சத்தியம் செய்யட்டும். அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு எனது குற்றச்சாட்டை சூரியனை பார்த்து நாய் குரைக்கிறது என்கிறார். நான் நாய்தான். நாய் யாரை பார்த்து குரைக்கும்? திருடனை பார்த்துதான் குரைக்கும். தமிழகம் அமைதிப் பூங்கா இல்லை. பயங்கரவாதிகளின் கொலைக்களம். முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி தமிழகத்தில்தான் கொல்லப்பட்டார். பயங்கரவாதிகளின் பாதுகாப்பான சொர்க்கமாக உள்ளது.

போராட்டத்தில் ஈடுபடும் பாஜகவினர் மீது வழக்கு போடுவது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை. 2011-ம் ஆண்டுக்கு முன் இரு கட்சிகளும் மாறிமாறிதான் ஆட்சிக்கு வந்தன. இன்னும் நாலேகால் ஆண்டுதான் உள்ளது. அடுத்து மீண்டும் பழைய நிலையே ஏற்படும். மத்தியில் 2024-ம் ஆண்டிலும் மோடிதான் ஆட்சிக்கு வருவார். எந்த உருவத்திலும் பயங்கரவாதம் நாட்டில் தலைவிரித்தாடக்கூடாது என்பதுதான் பாஜகவின் விருப்பம். பஞ்சாப்பில் பிரதமர் மோடிக்கு ஏற்பட்ட நிலை குறித்து தவறாக கருத்து தெரிவித்த எம்.பி.க்கள் ஜோதிமணி, திருமாவளவன் மீது வழக்கு பதிவு செய்யவேண்டும். ஜோதிமணியை குண்டர் சட்டத்தில் கைது செய்யவேண்டும்” என்றார் ஹெச்.ராஜா.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x