Published : 11 Jan 2022 12:47 PM
Last Updated : 11 Jan 2022 12:47 PM

பொங்கலுக்குப் பின்னர் முழு ஊரடங்குக்கு வாய்ப்பு இல்லை: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

சென்னை: தமிழகத்தில் பொங்கல் பண்டிகைக்குப் பின்னர் தொடர்ச்சியான முழு ஊரடங்கிற்கு வாய்ப்பு இல்லை என்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

சென்னையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ''சென்னையைப் பொறுத்தவரை 26 ஆயிரம் பேர் நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 21 ஆயிரத்து 987 பேர் வீடுகளில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளனர். இவர்களைக் கண்காணிக்க வட்டத்துக்கு 5 தன்னார்வலர்கள் நியமிக்கப்படடு, 1000 தன்னார்வலர்கள் களப்பணி ஆற்றிக் கொண்டுள்ளனர். மாநகராட்சியின் மண்டல அலுவலகங்களில் மருத்துவர்கள் மற்றும் தன்னார்வலர்கள் 180 பேர் தொலைபேசி அழைப்புகள் மூலம் அவர்களுக்கு மருத்துவ ஆலோசனைகளை வழங்கி வருகின்றனர்.

இதுதவிர கிளஸ்டர் பகுதிகளில் வீட்டின் அருகிலேயே மருத்துவ முகாம்கள் அமைப்பதற்கு 200 மருத்துவக் குழுக்கள் சென்னை மாநகரில் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. மேலும் 22 இடங்களில் ஸ்கிரீனிங் சென்டர்களும், நந்தனம் வர்த்தக மையத்தில் 904 படுக்கைகளுடன் கூடிய கரோனா பாதுகாப்பு மையமும் அமைக்கப்பட்டுள்ளது. நேற்று முதல் தொற்று பாதித்த 30 பேர் இங்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் ராஜீவ்காந்தி மருத்துவமனை மற்றும் கிங்ஸ் மருத்துவமனையில் தலா 250 பேர் தொற்று பாதித்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்கள் யாரும் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கவோ, ஆக்சிஜன் தேவையோ ஏற்படவில்லை. அனைவரும் நலமுடன் உள்ளனர்.

கரோனா 3-வது அலையைப் பொறுத்தவரை தீவிர சிகிக்சை என்பது குறைவாகவே உள்ளது. தமிழ்நாட்டில் சோதனைக்கு வரும் மாதிரிகளில் 85 விழுக்காடு ஒமைக்ரான் பாதிப்பு கண்டறியப்படுவதால் மரபணு பரிசோதனை கைவிடப்படுகிறது. 100 பேருக்கு கரோனா உறுதியானால் 85 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் பொங்கல் பண்டிகைக்குப் பிறகு தொடர்ச்சியாக முழு ஊரடங்கிற்கு வாய்ப்பில்லை'' என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x