Published : 11 Jan 2022 07:23 AM
Last Updated : 11 Jan 2022 07:23 AM

ஓ.பன்னீர்செல்வத்துக்கு எதிராக வழக்கு தொடர்ந்தவரிடம் போலீஸார் இன்று விசாரணை

தேனி: முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், ப.ரவீந்திரநாத் எம்.பி. ஆகியோருக்கு எதிராக வழக்கு தொடர்ந்தவரிடம் தேனி மாவட்ட குற்றப் பிரிவு போலீஸார் இன்று விசாரணை நடத்த உள்ளனர்.

தேனி மாவட்ட திமுக இளைஞர் அணி முன்னாள் அமைப்பாளர் மிலானி. இவர் தேனி குற்றவியல் நீதித் துறை நடுவர் நீதிமன்றத்தில் கடந்த 30-ம் தேதி ஒரு மனு தாக்கல் செய்திருந்தார்.

அதில், கடந்த ஆண்டு நடந்த சட்டப் பேரவைத் தேர்தலில் ஓ.பன்னீர்செல்வம், கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் ப.ரவீந்திரநாத் ஆகியோர் தங்கள் சொத்து, கடன் உட்பட பல்வேறு விவரங்களை மறைத்து வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்துள்ளனர். இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி பன்னீர்செல்வம், இது குறித்து மாவட்ட குற்றப்பிரிவு போலீஸார் விசாரித்து வழக்குப் பதிவு செய்ய கடந்த 7-ம் தேதி உத்தரவிட்டார். இதனடிப்படையில் நேற்று முன்தினம் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இந்நிலையில் இருவர் மீதும் தனித்தனியாகப் பதிவு செய்யப்பட்ட வழக்குப் பதிவு விவரங்களை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் மாவட்ட குற்றப் பிரிவு போலீஸார் நேற்று சமர்ப்பித்தனர்.

விசாரணைக்காக காவல் துணை கண்காணிப்பாளர் சுந்தர்ராஜன் தலைமையில் ஆய்வாளர் அங்கையர்கண்ணி உட்பட 5 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. பத்திரப் பதிவு, சொத்து விவரங்கள் உட்பட வழக்கு தொடர்பான விவரங்களை இக்குழு ஆய்வு செய்து விசாரிக்க உள்ளது.

இதன் முதற்கட்டமாக மனுதாரர் மிலானி இன்று (செவ்வாய்) விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளார். அவரிடம் உள்ள ஆவணங்கள் உள்ளிட்டவற்றை சரிபார்த்து மாவட்ட குற்றப் பிரிவு போலீஸார் விசாரணை செய்வர்.

மேலும் மனுதாரர் மிலானிக்கு ஒரு சிறப்பு சார்பு ஆய்வாளர் உள்ளிட்ட 5 பேர் கொண்ட போலீஸார் பாதுகாப்பு அளித்து வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x