

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் செந்திலாண்டவர் கோயிலில் பாதயாத்திரை பக்தர்கள் குவிந்து வருகின்றனர்.
கரோனா 3-வது அலையை தடுக்க தமிழகத்தில் பல்வேறுகட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. அனைத்து வழிபாட்டு தலங்களிலும் வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் பக்தர்களுக்கு அனுமதி கிடையாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி திருச்செந்தூர் செந்திலாண்டவர் கோயிலில் கடந்த 3 நாட்களாக பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதி அளிக்கப் படவில்லை.
ஆனால், ஆகம விதிப்படி வழக்கம்போல் அனைத்து பூஜைகளும் நடைபெற்றன. மூன்று நாட்களுக்கு பின்னர் நேற்று பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர். இதனால் கோயிலில் பக்தர்களின் கூட்டம் அலைமோதியது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் மாலை அணிந்து, விரதம் இருந்து காவடி எடுத்தும், அலகு குத்தியும் பாதயாத்திரையாக கோயிலுக்கு வந்து நேர்த்தி கடனை நிறைவேற்றினர். இதனால் கோயில் வளாகத்தில் பாதயாத்திரை பக்தர்களின் கூட்டம் அலைமோதியது. திருச்செந்தூர் கோயிலில் நேற்றுமுதல் பக்தர்கள் தரிசனம் 3 மணி நேரம் குறைக்கப்பட்டுள்ளது. அதிகாலை 5 மணி முதல் இரவு 7 மணி வரை மட்டும் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுகின்றனர்.