

சென்னை: தண்ணீர் திருட்டு வழக்குகளில் சிக்கிய விவசாயிகளுக்கு விவசாயக் கடன் வழங்கக் கூடாது என்றும், மானிய விலையில் உரம் விதை பெற முடியாதபடி அவர்களை கருப்புப் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பரம்பிக்குளம் - ஆழியாறு இணைப்பு திட்ட கால்வாயிலிருந்து கமலம், சுபா நடராஜன் ஆகியோர் தண்ணீர் எடுக்க அனுமதி அளித்த உத்தரவுகளை ரத்து செய்யக் கோரி, திட்டத்தின் முன்னாள் தலைவர் கே.பரமசிவம் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். தண்ணீர் சமமாக பங்கீடு செய்ய வேண்டுமெனவும், அனுமதி பெற்றாலும் சட்டவிரோதமாக அதிக தண்ணீர் எடுப்பதால், மற்ற விவசாயிகள் பாதிக்கப்படுவதாகவும், முறைகேட்டிற்கு எதிராக நடவடிக்கை எடுக்க பொதுப்பணித்துறை, நீர் வள அமைப்பு, மின் வாரியம் ஆகியவற்றிற்கு உத்தரவிட வேண்டுமென மனுவில் கோரியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீர் வளத்துறை தலைமைப் பொறியாளர் தரப்பில் தண்ணீர் திருட்டை தடுக்க அதிரடிப்படைகள் அமைத்து நடவடிக்கை எடுத்து வருவதாகவும், அதிகாரிகள் வருகையை முன்கூட்டியே அறிந்து, குழாய்களை அகற்றிவிட்டு, ஆய்வு முடித்து சென்றபின் மீண்டும் தண்ணீர் திருட்டில் ஈடுபடுவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. தண்ணீர் திருட்டு நடைபெறும் இடங்களில் மின் இணைப்பை துண்டிக்க டான்ஜெட்கோவிற்கு உடனடியாக தகவல் அளிப்பதாகவும் விளக்கம் அளிக்கப்பட்டது.
இதனையடுத்து நீதிபதி பிறப்பித்த உத்தரவில், அனுமதி பெற்று எடுப்பது மற்றும் சட்டவிரோதமாக எடுப்பது என இரண்டு வகையில் நிலத்திலிருந்து தண்ணீர் எடுக்கப்படுவதைச் சுட்டிக்காட்டி, எல்லோருக்கும் பொதுவானது என்ற முறையில் அனுமதி இல்லாமல் எடுப்பது தவறு என்றும், சட்டவிரோதமானது என்றும் குறிப்பிட்டுள்ளார். சட்டவிரோதமாக எடுப்பவர்கள் மீதும், அதற்கு உடந்தையாக இருக்கக்கூடிய சில அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் வேண்டுமெனவும், தண்ணீர் எடுப்பதற்கான உரிமங்கள் வழங்கும்போது சட்டவிதிமுறைகளை பின்பற்ற வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளார்.
வறட்சி காலத்தில் தண்ணீர் இல்லாமல் மக்கள் பாதிக்கப்படும் நிலையில், மதிப்புமிக்க அதை முறையாக பாதுகாக்க வேண்டும் எனவும் அரசுக்கு அறிவுறுத்தி உள்ளார். ஆழியாறு - பரம்பிக்குளம் திட்டத்தில் 30 ஆண்டுகளாக தண்ணீர் திருட்டு நடைபெறுவதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளதால், தமிழக பொதுப் பணித்துறை செயல் பொறியாளர், நீர் வள ஆதார அமைப்பின் தலைமை பொறியாளர், கண்காணிப்பு பொறியாளர் ஆகியோர் தண்ணீர் எடுக்க வழங்கப்பட்டுள்ள அனுமதியை மறு ஆய்வு செய்ய வேண்டுமெனவும் நீதுபதி உத்தரவிட்டுள்ளார்.
மேலும், தண்ணீர் திருட்டைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளை துரிதப்படுத்தி குற்ற வழக்குகள் பதிவு செய்ய வேண்டும் எனவும், அதை மின் வாரியத்திற்கு அனுப்பி மின் இணைப்பை துண்டிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பொதுப்பணி மற்றும் நீர் வள ஆதார துறைகளுக்கு உத்தரவிட்டுள்ளார். தண்ணீர் திருட்டு வழக்குகளில் சிக்கிய விவசாயிகளுக்கு விவசாயக் கடன் வழங்கக்கூடாது எனவும், மானிய விலையில் உரம், விதை பெற முடியாதபடி கருப்புப் பட்டியிலில் சேர்க்க வேண்டும் எனவும் அரசுக்கு உத்தரவிட்டுள்ளார்.
நீர் திருட்டில் ஈடுபடுபவர்களை துல்லியமாக கண்டுபிடிக்க ட்ரோன் கேமராவை பயன்படுத்த வேண்டும் எனவும், அனைத்து அரசு துறைகளும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளார். இந்த உத்தரவுகளை அமல்படுத்தி கோவை, திருப்பூர் மாவட்டங்களில் உள்ள சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு , இந்த வழக்கின் விசாரணையை ஜனவரி 25-ஆம் தேதிக்கு தள்ளிவைத்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.