Published : 10 Jan 2022 01:11 PM
Last Updated : 10 Jan 2022 01:11 PM

கடுமையாகும் கரோனா கட்டுப்பாடுகள் - முகக்கவசம் அணியாதவர்களிடம் ரூ.26 லட்சம் வசூல்: சென்னை மாநகராட்சி நடவடிக்கை

சென்னை: பொது இடங்களில் முகக்கவசம் அணியாதவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி மண்டல அலுவலர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

அதனைத் தொடர்ந்து கடந்த டிச. 31-ம் தேதி முதல் அபராதம் விதிக்கும் பணி தீவிரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி நேற்று வரையிலான 10 நாட்களில் மொத்தம் 13,635 பேர் முகக்கவசம் அணியாமல் பிடிபட்டனர். அவர்களிடமிருந்து மாநகராட்சி சார்பில் ரூ.26 லட்சத்து 29 ஆயிரம் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது.

மேலும் பொங்கல் பண்டிகை நெருங்கி வரும் வேளையில், வணிக வளாகங்கள், கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோத வாய்ப்பு உள்ளதால், அங்கு சமூக இடைவெளியைக் கடைபிடிக்காமல் இருந்தால் வணிக நிறுவனங்களுக்கும், கடைக்காரர்களுக்கும் அபராதம் விதிக்க மாநகராட்சி நடவடிக்கை எடுத்து வருகிறது.

மண்டபங்களுக்கு அபராதம்

சென்னை மாநகரில் கரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்தும் வகையில் ஓட்டல்கள், திருமண மண்படங்கள், விருந்து அரங்கங்கள், சமூகநலக் கூடங்கள் ஆகியவற்றில் முன்பதிவு செய்யப்படும் திருமணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் குறித்த விவரங்களை மாநகராட்சிக்கு தெரிவிக்க வேண்டும் என்று ஏற்கெனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கடந்த 6, 7-ம் தேதிகளில் மாநகராட்சி அலுவலர்கள் 81 இடங்களில் மேற்கொண்ட கள ஆய்வில் 5 திருமண மண்பங்களில் கரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றாதது தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து அந்த 5 திருமண மண்டபங்களிடமிருந்து மொத்தம் ரூ.13 ஆயிரத்து 600 அபராதம் வசூலிக்கப்பட்டது.

மேலும் தமிழக அரசு பொது சுகாதாரத் துறை நெறிமுறைகளின்படி மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் கரோனா தொற்று அறிகுறி உள்ளவர்கள் என கருதப்படும் நபர்கள் குறித்த தகவல்களை மாநகர நல அலுவலருக்கு தெரிவிக்க வேண்டும். சென்னையில் 538 தனியார் மருத்துவமனைகள், 74 ஸ்கேன் மையங்கள் உள்ளன.

கடந்த 7-ம் தேதி வரை தனியார் மருத்துவமனைகள் மற்றும் ஸ்கேன் மையங்களில் மொத்தம் 1,159 பேர் கரோன தொற்று அறிகுறிகளுடன் சிகிச்சைக்கு வந்ததாக விவரங்கள் பெறப்பட்டுள்ளன. அதன்படி அவர்களை பரிசோதனை செய்ததில் 187 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. தொற்று அறிகுறிகள் குறித்து தகவல் தெரிவிக்காத 6 தனியார் மருத்துவமனைகள் மீது நடவடிக்கை மேற்கொள்ள விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x