

தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையை கொண்டாடும் விதமாக, விவசாயிகள் தங்களது நிலங்களில் விளைவித்த பயிர்களை அறுவடை செய்ய, அவற்றுக்கு பூஜை செய்து பணிகளை தொடங்குவார்கள். பூஜையில் நெல் மணிகள், காய்கறிகள், மஞ்சள் குலை ஆகியவற்றுடன் பனங்கிழங்கும் பிரதானமாக இடம்பெற்றிருக்கும். தமிழ்நாட்டின் மாநில மரமான பனை மரத்தின் பாகங்களில் பதநீர், நுங்கு, கருப்பட்டி, பனங்கற்கண்டு, ஓலை, பனங்கட்டைகள் என, அனைத்தும் பயன்படுகிறது. இதில், நுங்கு பருவம் கடந்துவிட்டால், அது பனம் பழமாக மாறும்.
கோவில்பட்டி, காமநாயக்கன்பட்டி, முத்துலாபுரம், அயன்வடமலாபுரம், வேம்பார், விளாத்திகுளம், குளத்தூர் பகுதிகளில் லட்சக்கணக்கான பனை மரங்கள் உள்ளன. இங்கு ஒவ்வொரு ஆண்டும் ஆவணி மாத கடைசியில் பனை விதைகளை தனித்தனியாக பிரித்து, குறுமணல் பகுதியில் தொழிலாளர்கள் புதைத்து வைப்பார்கள். புரட்டாசி மாதத்தில் பெய்யும் மழையில் ஈரப்பதம் ஏற்பட்டு, விதை முளைத்து, பனங்கிழங்காக மாறும். பொங்கல் பண்டிகைக்கு இன்னும் 5 நாட்களே உள்ள நிலையில், கடந்த 10 நாட்களாக அயன்வடமலாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் குறுமணலில் இருந்து பனங்கிழங்கு எடுக்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.
நலிவடைந்து வருகிறது
இதுகுறித்து தொழிலாளி ஐகோர்ட் மகாராஜா கூறும்போது, “பனங்கிழங்கு தமிழர்களின் பாரம்பரிய மருத்துவ குணமுள்ள பொருளாகும். இந்தாண்டு 25 எண்ணம் கொண்ட பனங்கிழங்கு கட்டு ரூ.80-க்கு வியாபாரிகள் வாங்கிச் செல்கின்றனர். பனைத் தொழில் கடந்த பல ஆண்டுகளாக நலிவடைந்து வருகிறது. இத்தொழில் புரிந்தோர் பலர் போதிய வருமானமின்றி மாற்றுத் தொழிலுக்கு சென்றுவிட்டனர். பனைத் தொழில் பாதுகாக்கப்பட வேண்டும். தமிழக அரசு ஆண்டுதோறும் மக்களுக்கு பொங்கல் பரிசு வழங்கி வருகிறது. அதனுடன் சேர்த்து பனங் கிழங்கு கட்டு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இதன் மூலம் பனைத் தொழில் செய்வோரின் வாழ்வாதாரம் உயரும்” என்றார்.