Published : 09 Jan 2022 06:52 AM
Last Updated : 09 Jan 2022 06:52 AM

தமிழகத்தில் இன்று முழு ஊரடங்கு; அத்தியாவசிய சேவைகளுக்கு மட்டும் அனுமதி: பேருந்துகள், டாஸ்மாக் கடைகள் இயங்காது

சென்னை

தமிழகத்தில் இன்று முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், அத்தியாவசிய சேவைகளுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. பேருந்துகள், மெட்ரோரயில், டாஸ்மாக் கடைகள் இயங்காது.

தமிழகத்தில் கரோனா, ஒமைக்ரான் பரவலை கட்டுப்படுத்துவது குறித்து, முதல்வர் ஸ்டாலின் தலைமையில் கடந்த ஜன.4-ம் தேதிஆலோசனைக் கூட்டம் நடந்தது. இதில் எடுக்கப்பட்ட முடிவின்படி, கடந்த 6-ம் தேதி முதல் இரவுநேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதன்படி, இரவு 10 மணி முதல் மறுநாள் காலை 5 மணி வரை குறிப்பிட்ட அத்தியாவசிய சேவைகள் தவிர, மற்றஅனைத்துக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இன்று ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. இரவு நேர ஊரடங்கும் தற்போது அமலில் இருப்பதால், நேற்று இரவு 10 மணி முதல் நாளை(ஜன.10) காலை 5 மணி வரை ஊரடங்கு தொடர்ந்து அமலில் இருக்கும்.

பெட்ரோல் பங்க் இயங்கும்

மருத்துவப் பணிகள், மருந்தகங்கள், பால், தினசரி பத்திரிகைகள் விநியோகம், ஏடிஎம் மையங்கள்,சரக்கு வாகனப் போக்குவரத்து, பெட்ரோல், டீசல் பங்க் இயங்கும்.

பொதுப் போக்குவரத்து, மெட்ரோ ரயில் இயங்காது. உணவகங்களில் காலை 7 முதல் இரவு 10 மணி வரை பார்சல் சேவை மட்டும் அனுமதிக்கப்படும். உணவு டெலிவரி செய்யும் மின்வணிக நிறுவனங்களும் இந்த நேரத்தில் செயல்படலாம். இதர மின்வணிக நிறுவனங்களுக்கு அனுமதி இல்லை.

விமானம், ரயில், பேருந்து நிலையங்களுக்கு செல்ல சொந்த, வாடகை வாகனங்களை பயன்படுத்தலாம். அவ்வாறு செல்லும்போது பயணச்சீட்டு வைத்துக் கொள்ள வேண்டும்.

ஏற்கெனவே முடிவெடுக்கப்பட்ட திருமணம் போன்ற குடும்பநிகழ்ச்சிகளை இன்று நடத்த அனுமதி உண்டு. நிகழ்ச்சிக்கு செல்வோர் திருமண அழைப்பிதழ்களை காட்டி, பயணம் மேற்கொள்ளலாம். திருமண மண்டபத்தில் 100 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்.

இன்று முழு ஊரடங்கின் காரணமாக, டாஸ்மாக் மதுபானக் கடைகள், மதுக்கூடங்களை மூடுமாறு அதன் மேலாண்மை இயக்குநர் சுப்பிரமணியன் உத்தரவிட்டுள்ளார்.

சென்னை கோயம்பேடு சந்தைக்கு இன்று விடுமுறை விடப்பட்டுள்ளது. இதனால், 2 நாட்களுக்கான காய்கறிகளை வாங்க சில்லறை வியாபாரிகள் நேற்று குவிந்தனர்.

இன்று இறைச்சிக் கடைகளும் மூடப்படுவதால், ஆடு, கோழி இறைச்சிக் கடைகளிலும் நேற்று ஏராளமானோர் குவிந்தனர்.

முழு ஊரடங்கு தொடர்ந்து அமல்படுத்தப்படலாம் என்ற தகவல் உலவுவதால், தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து வணிக வளாகங்கள், சூப்பர் மார்க்கெட்களில் மக்கள் அதிக அளவில் பொருட்களை வாங்கிச் சென்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x