ஆவடியில் பெயர் பலகை இல்லாததால் சார்-கருவூல அலுவலகத்தை கண்டுபிடிக்க முடியாமல் ஓய்வூதியதாரர்கள் அவதி

சார்-கருவூல அலுவலகம் பெயர் பலகை இன்றி, செல்லும் பாதையில் செடிகள் வளர்ந்து முட்புதர்களைப் போன்று காட்சியளிக்கிறது.
சார்-கருவூல அலுவலகம் பெயர் பலகை இன்றி, செல்லும் பாதையில் செடிகள் வளர்ந்து முட்புதர்களைப் போன்று காட்சியளிக்கிறது.
Updated on
1 min read

ஆவடியில் உள்ள சார்-கருவூல அலுவலகத்துக்கு பெயர் பலகைவைக்கப்படாததால், ஓய்வூதியதாரர்கள் அலுவலகத்தைக் கண்டுபிடிக்க முடியாமல் அலையும் நிலை ஏற்பட்டுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம், ஆவடி மாநகராட்சிக்கு உட்பட்ட ஆவடி - பூந்தமல்லி சாலையில், சட்டப்பேரவை உறுப்பினர் அலுவலகம் பின்புறம் சார்-கருவூலம் அலுவலகம் செயல்பட்டு வருகிறது.

இங்கு அரசு ஊழியர்களுக்கு சம்பள பட்டியல் மற்றும் பணத் தொகை வழங்குதல், சார் பதிவாளர் அலுவலகத்துக்கு பதிவுக்குத் தேவையான முத்திரைத் தாள் மற்றும் நீதிமன்ற வில்லைகள் விற்பனை செய்யப்படுகின்றன.

மேலும், அரசுப் பணியில் இருந்து ஓய்வு பெற்றவர்களுக்கு ஓய்வூதியம் நிர்ணயிப்பது, அவர்களுடைய குறைகளுக்குத் தீர்வு காண்பது உள்ளிட்ட பணிகள் இவ்வலுவலகத்தின் மூலம் மேற்கொள்ளப்படுகின்றன.

இதனால், ஓய்வூதியதாரர்கள், முத்திரை தாள்கள் விற்பனை செய்வோர் என தினமும் நூற்றுக்கணக்கானோர் இந்த அலுவலகத்துக்கு வந்து செல்கின்றனர்.

இந்த அலுவலகத்தின் முன்பகுதியில் பெயர் பலகை இல்லாததால், முதியவர்கள் அலுவலகத்தைக் கண்டுபிடிக்க முடியாமல் அலைந்து திரியும் நிலை ஏற்பட்டுள்ளது.

மேலும், அலுவலகத்தின் முன்பகுதியில் பெயர்ப் பலகை வைப்பதற்கு, வியாபாரிகள் சங்கம் சார்பில் அனுமதி கோரியபோது, அதிகாரிகள் அனுமதி வழங்க மறுத்து விட்டனர்.

அத்துடன், அலுவலகத்துக்குச் செல்லும் நுழைவு வாயில் பகுதியில் இருபுறமும் செடிகள் புதர்கள் போல வளர்ந்துள்ளன. இதனால், பாம்பு, தேள், விஷப்பூச்சிகளின் தொல்லை அதிகமாகஉள்ளது. இதனால், அலுவலகத்துக்கு வருபவர்கள் ஒருவித அச்சத்துடன் வரும் நிலை ஏற்பட்டுள்ளது.

எனவே, சார்-கருவூல அலுவலகத்துக்கு பெயர் பலகை வைக்க நடவடிக்கை எடுப்பதோடு, முட்புதர்களையும் அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in