Published : 08 Jan 2022 01:59 PM
Last Updated : 08 Jan 2022 01:59 PM

விவசாயத் தொழிலாளர் குடும்பங்களுக்கு வேலையில்லாக் கால நிவாரணமாக ரூ.10 ஆயிரம்: தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கோரிக்கை

பிரதிநிதித்துவப் படம்.

சென்னை: விவசாயத் தொழிலாளர் குடும்பங்களுக்கு வேலையில்லாக் கால நிவாரணமாக ரூ.10 ஆயிரம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளைத் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ''தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மற்றும் அ.இ.விவசாயத் தொழிலாளர்கள் சங்கத்தின் சார்பில் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டுமென்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜனவரி 5-ம் தேதி முதல் பத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாகத் தொடர் காத்திருக்கும் போராட்டம் நடைபெற்றது.

வேளாண்துறை அமைச்சர் பேச்சுவார்த்தைக்கு வருமாறு அழைப்பு விடுத்ததையொட்டி 5-ம் தேதி மாலை போராட்டம் ஒத்திவைக்கப்பட்டது. அதனடிப்படையில் நேற்று (07.01.2022) தமிழ்நாடு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மற்றும் அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கம் மாநில நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.

பேச்சுவார்த்தையின்போது, ''மழையால் பாதிக்கப்பட்ட பயிர்கள் குறித்து முறையான கணக்கெடுப்பு நடத்திட வேண்டும். முற்றிலும் அழிந்துபோன நெற்பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ.30,000 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும். இதர பயிர்களுக்கு உற்பத்திச் செலவை ஈடு செய்யக்கூடிய வகையில் இழப்பீடு வழங்க வேண்டும்.

விவசாயத் தொழிலாளர் குடும்பங்களுக்கு வேலையில்லாக் கால நிவாரணமாக ரூ.10 ஆயிரம் வழங்க வேண்டும்.

தண்ணீர் தேங்கி பாதிக்கப்பட்ட அனைத்துக் குடும்பங்களுக்கும் தலா ரூ.5000 வழங்க வேண்டும். அனைத்துக் கால்நடைகளுக்கும் தடுப்பூசி போடுவதுடன், இறந்துபோன கால்நடைகளுக்கு அதனதன் மதிப்பிற்கேற்ப இழப்பீடு வழங்க வேண்டும்.

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் தேசிய கூட்டுறவு சர்க்கரை ஆலை, வேலூர் மாவட்டம் ஆம்பூர் கூட்டுறவு சர்க்கரை ஆலை கடந்த ஆட்சியில் மூடப்பட்டது. இதனால் விவசாயிகளும், தொழிலாளர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். இரண்டு ஆலைகளுக்கும் தலா பத்து கோடி ரூபாய் கடனாக வழங்கினால் இந்த ஆண்டே அரவையைத் தொடங்க முடியும். இதற்குரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கரும்புக்கு மாநில அரசால் அறிவிக்கப்படும் பரிந்துரை விலையை Éiyia (State Adviced Price) கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் வருவாய்ப் பங்கீட்டு முறை சட்டத்தை நிறைவேற்றி நிறுத்திவிட்டார்கள். எனவே, வருவாய்ப் பங்கீட்டு முறை சட்டத்தை ரத்து செய்து மீண்டும் மாநில அரசின் பரிந்துரை விலையை அறிவித்திட நடவடிக்கை எடுக்க வேண்டும். 2020-21ஆம் ஆண்டு பயிர்க் காப்பீட்டு பிரீமியம் செலுத்தியவர்களில் காப்பீட்டுத் தொகை கிடைக்காமல் தகுதிவாய்ந்த பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். விடுபட்ட விவசாயிகளுக்கு காப்பீட்டுத் தொகை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்'' ஆகிய கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.

இப்பேச்சுவார்த்தையில், அமைச்சருடன் அரசின் சார்பில் வேளாண்மைத் துறை அதிகாரிகளும் கலந்துகொண்டனர். மாநிலப் பொதுச் செயலாளர் பெ.சண்முகம் தலைமையில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் மாநிலத் தலைவர் வி.சுப்பிரமணியன், மாநிலத் துணைத் தலைவர் டி.ரவீந்திரன், மாநிலச் செயலாளர் ஜி.மாதவன் ஆகியோரும் விவசாயத் தொழிலாளர்கள் சங்கத்தின் சார்பில் மாநிலப் பொதுச் செயலாளர் வி.அமிர்தலிங்கம், மாநிலத் துணைத் தலைவர் மலைவிளைபாசி, மாநிலச் செயலாளர் ஜி.ஸ்டாலின் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கீழ்வேளூர் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் நாகை மாலி, கந்தர்வகோட்டை தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் எம்.சின்னதுரை ஆகியோர் கலந்து கொண்டனர்.

அமைச்சர் மற்றும் அதிகாரிகளுடான பேச்சுவார்த்தை திருப்திகரமாக இருந்தது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம். மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு வழங்கப்படும் நிவாரணத் தொகையை அதிகப்படுத்தி வழங்கவும், பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நிவாரணம் கிடைக்கவும், தமிழ்நாடு அரசு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்'' என்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x