Published : 08 Jan 2022 12:33 PM
Last Updated : 08 Jan 2022 12:33 PM

'நீடித்த நிலையான பருத்தி இயக்கம்' - பருத்தி விவசாயிகளுக்காக ரூ.11 கோடி செலவில் ஸ்டாலின் புதிய திட்டம்

பிரதிநிதித்துவப் படம்.

சென்னை: பருத்தி விவசாயிகளின் நலனுக்காக ரூ.11 கோடி மதிப்பீட்டில் 'நீடித்த நிலையான பருத்தி இயக்கம்' என்ற புதிய திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்.

இது தொடர்பாகத் தமிழக அரசு இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில், ''தமிழகத்தில் 'வெள்ளைத் தங்கம்' என்று அழைக்கப்படும் பருத்திப் பயிரானது, சராசரியாக 1.62 லட்சம் ஹெக்டேர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டு, ஒரு ஹெக்டருக்கு 411 கிலோ உற்பத்தித் திறனுடன் 3.92 லட்சம் பொதிகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. தமிழகத்தில் சுமார் 2000 நூற்பாலைகள் இயங்குவதால், நாட்டின் பருத்தி நூற்புத்திறனில் முதன்மை மாநிலமாகத் தமிழகம் விளங்குகிறது.

உயர்தர பருத்தி உற்பத்தித் திறன் மற்றும் உற்பத்தியை அதிகரிக்கவும், பருத்தி நூற்பாலைகளின் பெருகிவரும் தேவைகளைப் பூர்த்தி செய்யவும் தமிழக அரசு பல்வேறு சீரிய முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அவற்றில் மேலும் ஒரு சிறப்பம்சமாக, பருத்தி விவசாயிகளின் நலன் கருதி, ரூ.11 கோடி மதிப்பில் நீண்ட இழை பருத்தி சாகுபடி மற்றும் ஒருங்கிணைந்த உத்திகளை 25,000 ஹெக்டர் பரப்பளவில் செயல்படுத்திட நீடித்த நிலையான பருத்தி இயக்கம் என்ற புதிய திட்டத்தைத் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (8.1.2022) தலைமைச் செயலகத்தில், ஐந்து விவசாயிகளுக்கு இடுபொருட்களை வழங்கி தொடங்கி வைத்தார்.

இத்திட்டத்தின் கீழ், நீண்ட, மிக நீண்ட இழை பருத்தி ரகங்களான எஸ்.வி.பி.ஆர்-5, எஸ்.வி.பி.ஆர்-6, கோ-14, சுரபி, சூரஜ் மற்றும் கோ-17 விதை உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கு ஊக்கத்தொகையாக ஒரு கிலோ விதைக்கு ரூ.60 வீதமும், சான்று பெற்ற பருத்தி விதைகள் விநியோகத்தின் கீழ் கிலோவிற்கு ரூ.130 வீதம், ஹெக்டருக்கு ரூ.1,300, பருத்தியில் ஊடுபயிர் சாகுபடி செய்திட பயறு விதைகள் ஒரு ஹெக்டேருக்கு ரூ.500, பருத்தி நுண்ணுரங்கள் மற்றும் திரவ உயிர் உரங்கள் ஒரு ஹெக்டேருக்கு ரூ.950, ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மைக்கான இடுபொருட்கள் ஒரு ஹெக்டேருக்கு ரூ.6,500, விசை களைக்கருவி ஒன்றிற்கு ரூ.47,000 மற்றும் தண்டு கூன் வண்டுகளை கட்டுப்படுத்த வேப்பம் புண்ணாக்கு இடுவதற்கு ஹெக்டேர் ஒன்றிற்கு ரூ.5,000 வீதம் மானியத்தில் பருத்தி விவசாயிகள் பெற்றுக் கொள்ளலாம்.

இத்திட்டத்தில் விருப்பமுள்ள சிறு, குறு விவசாயிகள், பெண் விவசாயிகள், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின விவசாயிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். இத்திட்டத்தினால் நடப்பாண்டில் தமிழகத்தின் பருத்தி சாகுபடியினை 1.70 லட்சம் ஹெக்டேர் ஆக உயர்த்தவும், பருத்தி மகசூலை ஒரு ஹெக்டேருக்கு 380 கிலோவிலிருந்து 430 கிலோ என்ற அளவிற்கு பஞ்சு மகசூலை உயர்த்தி, உற்பத்தியினை 4.30 லட்சம் பொதிகளாக உயர்த்தவும் வழிவகை செய்யப்படும்'' என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x