Published : 08 Jan 2022 11:42 AM
Last Updated : 08 Jan 2022 11:42 AM

தமிழக அரசின் அனைத்துப் பணிகளுக்கும் நேர்முகத் தேர்வை ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ்

சென்னை: தமிழக அரசின் அனைத்துப் பணிகளுக்கும் நேர்முகத் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ராமதாஸ் இன்று வெளியிட்ட அறிக்கையில், “தமிழக அரசின் அனைத்துப் பொதுத்துறை நிறுவனங்களுக்குமான ஆள்தேர்வுப் பணிகளைத் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையமே இனி மேற்கொள்ளும் என்று தமிழக அரசு அறிவித்திருக்கிறது. அதற்கான சட்டத் திருத்தம் தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இது வரவேற்கத்தக்கது.

தமிழ்நாட்டில் அரசு போக்குவரத்துக் கழகங்கள், மின்வாரியம் ஆகியவற்றில்தான் அதிக எண்ணிக்கையில் தொழிலாளர்கள் பணியாற்றுகின்றனர். ஆவின், குடிநீர் வடிகால் வாரியம் போன்ற பொதுத்துறை நிறுவனங்களிலும் அதிக பணியிடங்கள் உள்ளன. தமிழ்நாட்டில் அனைத்துப் பொதுத்துறை நிறுவனங்களுக்கும் வேலைவாய்ப்பக பதிவு மூப்பின் அடிப்படையில்தான் நியமனங்கள் செய்யப்பட வேண்டும் என்பதுதான் பாமகவின் நிலைப்பாடு ஆகும். அதுதான் ஊழல் இல்லாத, வெளிப்படையான ஆள்தேர்வுக்கு வழிவகுக்கும்.

ஆனால், 2000ஆம் ஆண்டுக்குப் பிறகு அனைத்துப் பொதுத்துறை நிறுவன நியமனங்களுக்கும் எழுத்துத் தேர்வு, நேர்காணல் ஆகியவை திட்டமிட்டு திணிக்கப்பட்டன. அவை பணியாளர் நியமனங்களில் தகுதி, திறமைக்கு முன்னுரிமை அளித்து, வெளிப்படைத் தன்மையை ஏற்படுத்துவதற்கு பதிலாக முறைகேடுகளும், ஊழலும் பெருகுவதற்குத்தான் வழிவகுத்தன.

பொதுத்துறை நிறுவனங்களில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி கோடிக்கணக்கில் மோசடி செய்ததாக முன்னாள், இந்நாள் அமைச்சர்கள் மீது மோசடி வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. பொதுத்துறை நிறுவனங்களின் ஆள் தேர்வு முறையில் ஓட்டைகள் இருப்பதுதான் முறைகேடுகள் நடப்பதற்கும், மோசடிகள் செய்யப்படுவதற்கும் காரணம் ஆகும். அனைத்துப் பொதுத்துறை நிறுவனங்களுக்கும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் போட்டித் தேர்வுகளை நடத்தி பணியாளர்களைத் தேர்வு செய்வது நியமனங்களில் ஊழலைத் தடுக்க உதவும் என்பதில் எந்த ஐயமும் இல்லை.

அதேநேரத்தில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் செயல்பாடுகளில் சீர்திருத்தங்களையும், மாற்றங்களையும் மேற்கொள்ளாமல் பணியாளர் நியமனங்களில் ஊழலை ஒழிக்க முடியாது. மின்சார வாரியமாக இருந்தாலும், அரசு போக்குவரத்துக் கழகங்களாக இருந்தாலும் ஓட்டுநர், நடத்துநர், வயர் மேன் உள்ளிட்ட அடிப்படைப் பணிகளில் தொடங்கி பொறியாளர் பணி வரை அனைத்துப் பணிகளுக்கும் நடத்தப்படும் நேர்காணல்கள்தான் ஊழலின் ஊற்றுக்கண்ணாக திகழ்கின்றன. பொதுத்துறை நிறுவனப் பணியாளர்களை அரசுப் பணியாளர் தேர்வாணையமே தேர்ந்தெடுத்தாலும்கூட, அங்கும் நேர்காணல்கள் நடத்தப்பட்டால் முறைகேடுகளையும் ஊழலையும் தடுக்க முடியாது என்பது பாமகவின் திடமான கருத்து.

பொதுத்துறை நிறுவனப் பணிகள் மட்டுமின்றி, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் நடத்தப்படும் முதல் தொகுதி (குரூப்- 1) மற்றும் இரண்டாம் தொகுதி (குரூப்- 2) பணிகள் உள்ளிட்ட மற்ற பணிகளுக்கான ஆள்தேர்விலும் நேர்காணல்கள் ரத்து செய்யப்பட்டால் மட்டுமே, பணி நியமனங்களில் ஊழலையும், முறைகேட்டையும் ஒழிக்க முடியும். மத்திய அரசுப் பணிகளைப் பொறுத்தவரை குரூப் ஏ, குரூப் பி அரசிதழ் பதிவுப் பணிகள் தவிர மற்ற அனைத்துப் பணிகளுக்கும் நேர்காணல் முறை ரத்து செய்யப்பட்டு விட்டது. ஆந்திர மாநிலம் அதை விட அடுத்தக்கட்டத்திற்கு சென்று மாவட்ட துணை ஆட்சியர், காவல்துறை துணை கண்காணிப்பாளர் உள்ளிட்ட குரூப்-1 பணிகளுக்குக் கூட நேர்காணலை ரத்து செய்துவிட்டது. ஆந்திராவைப் பொறுத்தவரை அரசுப் பணிகளுக்கு நேர்காணல் முற்றிலுமாக ஒழிக்கப்பட்டுவிட்டது.

தமிழ்நாட்டிலும் அதே நிலையை ஏற்படுத்தினால் மட்டும்தான் அரசுப் பணி நியமனங்களில் ஊழலையும், முறைகேட்டையும் ஒழிக்க முடியும். அப்போதுதான் தமிழகத்தின் கிராமப்புற, ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கும் குரூப்-1 பணிகளுக்குச் செல்ல முடியும். இதைக் கருத்தில் கொண்டு தமிழ்நாட்டில் அனைத்து அரசுப் பணிகளுக்கும் நேர்காணலை ரத்து செய்ய முதல்வர் ஆணையிட வேண்டும்.

பொதுத்துறை நிறுவனங்களுக்கான ஆள்தேர்வுகளையும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையமே மேற்கொள்ளும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அதற்கேற்ற வகையில் தேர்வாணையம் வலுப்படுத்தப் பட வேண்டும். ஆனால், ஆணையத்திற்கு தலைவர், 14 உறுப்பினர்கள் என மொத்தம் 15 பேர் இருக்க வேண்டும். ஆனால், இப்போது தலைவருடன் 6 உறுப்பினர்கள் மட்டுமே உள்ளனர். 8 உறுப்பினர் பணிகள் காலியாக உள்ளன. அவற்றை உடனடியாக நிரப்பி ஆணையத்தை வலுப்படுத்த வேண்டும். அதேபோல் ஆணையத்தின் பணியாளர்கள் எண்ணிக்கையையும் தமிழக அரசு கணிசமாக அதிகரிக்க வேண்டும்.

தமிழ்நாட்டில் அனைத்துப் பணிகளுக்கும் நேர்காணல்கள் ரத்து, அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் உறுப்பினர் பதவிகளை நிரப்புதல், மனிதவளத்தை அதிகரித்தல், அனைத்து நிலைகளிலும் வெளிப்படைத் தன்மையை உறுதி செய்தல் உள்ளிட்ட நடவடிக்கைகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் மேற்கொண்டால் அவர் பாராட்டுக்குரியவராக இருப்பார்; ஊழல் இல்லாத அரசு பணி நியமனங்கள் என்ற கனவும் நனவாகும்” என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x