Published : 07 Jan 2022 07:17 PM
Last Updated : 07 Jan 2022 07:17 PM

தமிழகத்திற்கு நீட் தேர்வு தேவை என வலியுறுத்துவோம்: பாஜக தலைவர் அண்ணாமலை

சென்னை: தமிழக பாஜக தலைவர்கள் இன்று கிண்டியில் உள்ள ராஜ்பவனில் ஆளுநரை சந்தித்து பேசினர். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பல்வேறு விஷயங்கள் தொடர்பாகப் பேசினார்.

நீட் தேர்வு தொடர்பாக நாளை அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறுவது குறித்து பேசிய அண்ணாமலை, ''நீட் தேர்வு தேவை என்பது தான் பாஜக நிலைப்பாடு. நீட் தேர்வு தொடர்பான நாளைய அனைத்துக் கட்சி கூட்டத்தில் பாஜக சார்பில் வானதி சீனிவாசன் பங்கேற்பார். நீட் தேர்வு குறித்து சாதக பாதக அம்சங்கள் நாளைய கூட்டத்தில் பாஜக சார்பில் எடுத்துரைக்கப்படுவதோடு தமிழகத்திற்கு நீட் தேர்வு தேவை என்பதை வலியுறுத்துவோம்" என்று தெரிவித்துள்ளார்.

முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மோசடி வழக்கில் தலைமறைவாக இருந்தபோது அவருக்கு பாஜகவினர் அடைக்கலம் கொடுத்ததாக காவல்துறை தெரிவித்தது.

இதுதொடர்பான செய்தியாளர்கள் கேள்விக்கு, ''ராஜேந்திர பாலாஜிக்கு அடைக்கலம் கொடுத்த பாஜக நிர்வாகிகளிடம் விளக்கம் கேட்க இருக்கிறோம்" என்று அண்ணாமலை பதில் தெரிவித்துள்ளார்.

இதேபோல் பஞ்சாப்பில் பிரதமரின் பாதுகாப்பில் விதிமீறல் நடந்தது தொடர்பாக பேசிய அண்ணாமலை, ''பிரதமரின் பாதுகாப்பு குறைபாட்டுக்கு பஞ்சாப் அரசு தான் பொறுப்பேற்க வேண்டும்'' என்று தெரிவித்துள்ளார்.

இதே விவகாரத்தை அண்ணாமலை, பொன்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட பாஜக தலைவர்கள் ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்த போதும் விவாதித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x