Published : 07 Jan 2022 04:17 PM
Last Updated : 07 Jan 2022 04:17 PM

நீட் தேர்வு விலக்கு விவகாரம்: முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நாளை அனைத்துக் கட்சிக் கூட்டம்

சென்னை: நீட்தேர்வு விலக்கு தொடர்பாக தலைமைச் செயலகத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை சட்டப்பேரவை அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டம் நடைபெற உள்ளதாகத் தமிழக அரசு அறிவித்துள்ளது.

சட்டப்பேரவைக் கூட்டத்தொடரின் இரண்டாம் நாளான நேற்று 110 விதியின் கீழ் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், ''நீட்தேர்வு விலக்கு மசோதா பற்றி கடிதம் கொடுக்க, அனைத்துக் கட்சி எம்.பி.க்களைச் சந்திக்க மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நேரம் ஒதுக்கவில்லை. மக்களால் தேர்வு செய்யப்பட்ட எம்.பி.க்களை மத்திய உள்துறை அமைச்சர் சந்திக்க மறுப்பது மக்களாட்சியின் மாண்புக்கு எதிரானது. நீட் தேர்வு விலக்கு குறித்து அனைத்துக் கட்சிகள் கூட்டம் ஜனவரி 8-ல் நடைபெறும். இதில் அனைத்துக் கட்சியினரும் பங்குபெற வேண்டும்'' எனக் கேட்டுக்கொண்டார்.

அதன்படி நீட் தேர்வு விலக்கு குறித்து நடைபெற உள்ள கூட்டம் குறித்து தமிழக அரசு அதிகாரபூர்வமாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது:

அதில், ''தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் 6.1.2022 அன்று 'நீட்' தேர்வு தொடர்பாக சட்டப்பேரவை அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டம் கூட்டுவது குறித்து, சட்டப்பேரவை விதி 110-ன்கீழ் அறிவித்தார். இதுகுறித்து, சட்டப்பேரவை அனைத்துக் கட்சித் தலைவர்களுக்கும் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. அதன்படி நாளை (8.1.2022) காலை 10.30 மணியளவில் தலைமைச் செயலகம், நாமக்கல் கவிஞர் மாளிகை கூட்டரங்கில் சட்டப்பேரவை அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டம் நடைபெறும்'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x