

சென்னை: முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள ஞாயிற்றுக்கிழமைகளில் ஏற்கெனவே திட்டமிட்டபடி நடத்தப்படும் போட்டித் தேர்வுகளுக்கு செல்பவர்களுக்கு தமிழக அரசு சிறப்பு அனுமதி வழங்கியுள்ளது.
தமிழகத்தில் கரோனா பரவலைதடுப்பதற்காக ஞாயிற்றுக்கிழமை மற்றும் இரவு நேரங்களில் முழுஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதற்கிடையே யுபிஎஸ்சி சார்பில் குடிமைப் பணிகளுக்கான (சிவில் சர்வீஸ்) முதன்மைத்தேர்வு உட்பட சில போட்டித்தேர்வுகள் ஜன. 9-ம் தேதி நடைபெற உள்ளன. இதனால் ஊரடங்கின்போது மாணவர்கள் தேர்வில் பங்கேற்பது குறித்து பல்வேறு குழப்பங்கள் நிலவின.
இந்நிலையில், முழு ஊரடங்கு நாளில் போட்டித்தேர்வில் பங்கேற்க பட்டதாரிகளுக்கு சிறப்பு அனுமதி வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்ட அறிவிப்பு:
கரோனா பரவலைத் தடுப்பதற்காக முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்ட ஞாயிற்றுக்கிழமையில் யுபிஎஸ்சி, டிஎன்பிஎஸ்சி நடத்தும்தேர்வுகள், மற்ற போட்டித் தேர்வுகள், நிறுவனங்களில் நடைபெறும் வேலைவாய்ப்புக்கான நேர்முகத் தேர்வுகள் ஆகியவற்றில் பங்கேற்க அனுமதி அளிக்கப்படுகிறது.
இதையடுத்து, தேர்வில் பங்கேற்கச் செல்லும் இளைஞர்கள் தங்கள் ஹால் டிக்கெட் அல்லதுஅழைப்புக் கடிதத்தை காண்பித்துபயணம் மேற்கொள்ளலாம். இதேபோல், முழு ஊரடங்கு நாட்களில் நடைபெறும் நேர்முக மற்றும் போட்டித்தேர்வுகளுக்கு செல்லும் போதும் இளைஞர்களுக்கு காவல்துறையினர் அனுமதி வழங்கி ஒத்துழைப்பு அளிப்பார்கள்.
இவ்வாறு அதில் கூறப்பட் டுள்ளது
பட்டதாரிகள் கோரிக்கை
இதற்கிடையே முழு ஊடரங்கின்போது பேருந்து, ரயில் உள்ளிட்ட பொது போக்குவரத்து வசதிகள் செயல்பட அனுமதியில்லை எனவே, அந்த நாளில் தேர்வு மையங்களுக்கு செல்வதில் சிரமம் இருக்கும். அதனால் தேர்வெழுத செல்பவர்களுக்காக சிறப்பு போக்குவரத்து வசதிகளை அரசு சார்பில் ஏற்பாடு செய்துதர வேண்டும் என்று பட்டதாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.