சேலம் ஓமலூரில் ஓய்வு பெற்ற ஆசிரியர் வீட்டின் பூட்டை உடைத்து 50 பவுன் நகை திருட்டு: விவசாயியின் மனைவியிடம் 9 பவுன் செயின் பறிப்பு

சேலம் ஓமலூரில் ஓய்வு பெற்ற ஆசிரியர் வீட்டின் பூட்டை உடைத்து 50 பவுன் நகை திருட்டு: விவசாயியின் மனைவியிடம் 9 பவுன் செயின் பறிப்பு
Updated on
1 min read

சேலம் ஓமலூரில் ஓய்வு பெற்ற ஆசிரியர் வீட்டில் 50 பவுன் நகை மற்றும் ரூ.50 ஆயிரம், வெள்ளிப் பொருட்களை திருடிய மர்ம நபர்கள் மற்றும் விவசாயியின் மனைவியிடம் 9 பவுன் செயினை பறித்த மர்ம நபர் மற்றும் நீதிபதி உள்ளிட்ட இரு வீடுகளில் கொள்ளை முயற்சியில் ஈடுபட முயன்றவர் தொடர்பாக போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சேலம் ஓமலூர் விரைவு நீதிமன்ற நீதிபதி சுவேதரன்யன். இவர் ஓமலூர் பிருந்தாவன் நகரில் வசித்து வருகிறார். நேற்று முன்தினம் நள்ளிரவு மர்ம நபர் இவரது வீட்டின் பின்புறம் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே புகுந்துள்ளார். சத்தம் கேட்டு வீட்டில் இருந்தவர்கள் எழுந்து கூச்சல்போடவே மர்ம நபர் அங்கிருந்து தப்பினார்.

மேலும், அதே பகுதியில் வசித்து வரும் சிலம்பரசன் என்பவர் வீட்டுக்குள் மர்ம நபர் புகுந்துள்ளார். வீட்டில் இருந்தவர்கள் கூச்சலிடவே மர்ம நபர் தப்பினார்.

இதனிடையே, சேலம் ஓமலூர் நீதிமன்றம் அருகே வசித்து வருபவர் விவசாயி அர்ஜூன். இவரது மனைவி லீலா. இவர் நேற்று முன்தினம் இரவு வீட்டில் தூங்கி கொண்டிருந்தபோது, மர்ம நபர் லீலா கழுத்தில் அணிந்திருந்த 9 பவுன் செயினை பறித்துக் கொண்டு தப்பினார்.

மேலும், ஓமலூர்-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை ஆர்.சி.செட்டிப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் ஓய்வு பெற்ற ஆசிரியர் ஆரோக்கியசாமி (71). இவர் மனைவியுடன் வசித்து வருகிறார். இவர் தனது மனைவியுடன் கடந்த 4-ம் தேதி கோவை சென்றார். நேற்று அதிகாலை ஆரோக்கியசாமியின் வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதாக அக்கம் பக்கத்தினர் ஆரோக்கியசாமிக்கு தெரிவித்தனர்.

அவர் வீட்டுக்கு வந்துபார்த்த போது, 50 பவுன் நகை மற்றும் ரூ.50 ஆயிரம் பணம், வெள்ளிப் பொருட்களை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரிந்தது. இவ்விரு திருட்டு மற்றும் கொள்ளை முயற்சி தொடர்பாக ஓமலூர் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும், எஸ்பி ஸ்ரீ அபிநவ் நேரில் விசாரணை நடத்தினார். மோப்ப நாய் மூலமும் விசாரணை நடந்தது. கைரேகை நிபுணர்கள் வீடுகளில் பதிவாகியிருந்த குற்றவாளிகளின் கைரேகைகளை பதிவு செய்து விசாரிக்கின்றனர். மேலும், அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளையும் போலீஸார் ஆய்வு செய்து வருகின்றனர். ஓமலூரில் ஒரே நாளில் அடுத்தடுத்து நடந்துள்ள இச்சம்பவங்கள் மக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in