Last Updated : 07 Jan, 2022 09:06 AM

 

Published : 07 Jan 2022 09:06 AM
Last Updated : 07 Jan 2022 09:06 AM

ஆதார் எண்ணுடன் ஆன்லைனில் விண்ணப்பித்தால் மட்டுமே மாடித்தோட்ட காய்கறி தொகுப்பு வழங்கப்படும்: தோட்டக்கலைத் துறை அறிவிப்பு

சென்னை: மாடித்தோட்ட காய்கறித் தொகுப்புகளை வழங்குவதில் பாகுபாடு காட்டப்படுவதாக எழுந்த புகாரையடுத்து, இனி தோட்டக்கலைத் துறையின் இணையதள முகவரியில், ஆதார் எண்ணுடன் ஆன்லைனில் பதிவு செய்தால் மட்டுமே காய்கறித் தொகுப்பு வழங்கப்படும் என்று தோட்டக்கலைத் துறை அறிவித்துள்ளது.

நகர்ப்புறங்களில் சத்தான காய்கறிகள் பெறுவதற்காக, தமிழக தோட்டக்கலைத் துறை சார்பில் மாடித்தோட்ட காய்கறிகள் தொகுப்பு வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில், இந்த திட்டத்தை செயல்படுத்துவதில் குளறுபடிகள் இருப்பதாகவும், பாகுபாடு காட்டப்படுவதாகவும் புகார்கள் எழுந்தன.

குறிப்பாக, அரசியல்வாதிகள், உள்ளூரில் செல்வாக்கு மிக்கவர்கள், குறிப்பிட்ட சாதியினர் போன்றவர்களுக்குத்தான் மாடித்தோட்ட காய்கறித் தொகுப்புவழங்கப்படுவதாகவும், சில அதிகாரிகள் லஞ்சம் பெற்றுக் கொண்டு வழங்குவதாகவும் புகார்கள் தெரிவிக்கப்பட்டன.

மேலும், விண்ணப்பித்து மாதக்கணக்கில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டதாகவும், ஒருவரே பலமுறை காய்கறித் தொகுப்புகளை பெறுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.

இவற்றுக்குத் தீர்வுகாணும் வகையில், மாடித்தோட்ட காய்கறிகள் தொகுப்பு உள்ளிட்டவற்றை இனி ஆதார் எண்ணுடன் ஆன்லைனில் விண்ணப்பித்தால் மட்டுமே, காய்கறித் தொகுப்புகளைப் பெற முடியும் என்று தோட்டக்கலைத் துறை அறிவித்துள்ளது.

இதன்படி, தோட்டக்கலைத் துறையின் https//tnhorticulture.tn.gov.in/kit/ இணையதள முகவரியில், ஆதார் எண்ணுடன் விண்ணப்பித்தால், முதலில் வருவோருக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் மாடித்தோட்ட காய்கறித் தொகுப்பு வழங்கப்படும். இதைத்தவிர வேறு எந்த வழியிலும் காய்கறித் தொகுப்புகளைப் பெற முடியாது என்று தோட்டக்கலைத் துறை திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து தோட்டக்கலைத் துறை அதிகாரிகள் கூறும்போது, "மாநகராட்சி, நகராட்சிப் பகுதிகளில் மட்டும் மாடித்தோட்ட காய்கறித் தொகுப்புகள் வழங்கப்படுகின்றன. ஊரகப் பகுதிகளில் மணல், உரம் உள்ளிட்டவை தாராளமாகக் கிடைக்கும் என்பதால், அங்கு காய்கறி விதைத்தளைகள் மட்டும் வழங்கப்படுகின்றன.

முதல்வரின் ஊட்டம் தரும் காய்கறி தோட்டத்தின் கீழ், நகர்ப்புறப் பகுதிகளில் ரூ.900 மதிப்புள்ள 6 வகையான காய்கறி விதைகள், 6 செடி வளர்க்கும் பைகள், 6 தென்னை நார்கட்டிகள், 400 கிராம் உயிர் உரங்கள், 200 கிராம் உயிரி கட்டுப்பாட்டுக் காரணி, 100 மில்லி லிட்டர் இயற்கை பூச்சிக்கொல்லி மருந்து மற்றும்சாகுபடி முறைகளை விளக்கும் கையேடு ஆகியவை கொண்ட மாடித்தோட்ட தளை ரூ.225-க்கு வழங்கப்படுகிறது.

அதேபோல, ஊரகப் பகுதிகளில் ரூ.15-க்கு கத்தரிக்காய், மிளகாய், வெண்டைக்காய், தக்காளி, அவரை, பீர்க்கன், புடலை, பாகல், சுரைக்காய், கொத்தவரை, சாம்பல்பூசணி, கீரைகள் ஆகிய 12 வகை காய்கறி விதைத்தளைகள் வழங்கப்படுகின்றன.

நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்த, ஊட்டச்சத்து தளைகள் வழங்கும் திட்டத்தின் கீழ் மூலிகைச் செடிகள், நோய் எதிர்ப்பு சக்தி கொண்ட பழங்கள், காய்கறிகளை வளர்க்க ரூ.25-க்கு பப்பாளி, எலுமிச்சை, முருங்கை, கறிவேப்பிலை, திப்பிலி, கற்பூரவல்லி, புதினா, சோற்றுக்கற்றாழை ஆகிய 8 செடிகள் கொண்ட ஊட்டச்சத்து தளைகள் வழங்கப்படுகின்றன.

இந்த திட்டங்களின் கீழ் தளைகளைப் பெற விரும்புவோர், தோட்டக்கலைத் துறை இணையதள முகவரியில், ஆதார் எண்ணுடன் ஆன்லைனில் விண்ணப்பித்தால் மட்டுமே காய்கறி விதைத் தொகுப்பை் பெற முடியும் என்ற புதிய நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் தேவையற்ற குளறுபடிகள், லஞ்சப் புகார்கள் முற்றிலுமாக தடுக்கப்படும்" என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x