Published : 06 Jan 2022 06:12 PM
Last Updated : 06 Jan 2022 06:12 PM

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பு; வெள்ளை அறிக்கை தேவை: பொன். ராதாகிருஷ்ணன்

சென்னை: நீட்டுக்கு முன்னரும், பின்னரும் எத்தனை அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ சீட் கிடைத்தது என்பது குறித்து தமிழக அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று பாஜக மூத்த தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

இன்று நடந்த சட்டப்பேரவைக் கூட்டத்தில், முதல்வர் ஸ்டாலின், “அனைத்துக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களும், உள்துறை அமைச்சரை நேரில் சந்திக்க நேரம் கேட்டனர். ஆனால், இதுவரையிலே, அவர்களைச் சந்திக்க மத்திய உள்துறை அமைச்சர் மறுத்து வருகிறார். பல நாட்கள் கடந்தும், உள்துறை அமைச்சர் அமித் ஷா நேரில் சந்திக்க நேரம் ஒதுக்காத நிலையில், அவரிடம் கொடுக்கப்பட வேண்டிய நீட் தொடர்பான மனு, அவரது அலுவலகத்திலே நேற்றைய தினம் கொடுக்கப்பட்டிருக்கிறது. மக்கள் பிரதிநிதிகளை மத்திய உள்துறை அமைச்சர் சந்திக்க மறுப்பது மக்களாட்சியினுடைய மாண்புக்கு எதிரானதாகும்” என்று தெரிவித்தார்.

மேலும், நீட் விவகாரம் தொடர்பான அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து விவாதிக்க ஜனவரி 8ஆம் தேதி அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெறும் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் இதுகுறித்துப் பேசிய பாஜக மூத்த தலைவர், முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் செய்தியாளர் சந்திப்பில் கூறும்போது, “நீட் தேர்வைப் பயன்படுத்தி மாணவர்களைத் தூண்டிவிட திமுக முயல்கிறது. நீட் வந்த பிறகு அரசுப் பள்ளி மாணவர்கள் எத்தனை பேருக்கு வாய்ப்பு கிடைத்திருக்கிறது. நீட்டுக்கு முன்னர் மருத்துவ சீட்டுகள் கோடிக்கணக்கில் விலை பேசப்பட்ட காலத்தில் எத்தனை அரசு மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பிக்கான சீட் கிடைத்தது. இது தொடர்பாக தமிழக அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். தமிழக மாணவர்களுக்கும், அவர்களது பெற்றோர்களுக்கும் இதனைச் சுட்டிக்காட்டும் கடமை திமுக அரசுக்கும் உள்ளது’’ என்று தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x