Published : 06 Jan 2022 08:28 AM
Last Updated : 06 Jan 2022 08:28 AM

ராஜேந்திர பாலாஜிக்கு 15 நாட்கள் நீதிமன்றக் காவல்: சிறையில் அடைப்பு

விருதுநகர்: கடந்த அதிமுக ஆட்சியில் வேலை வாங்கி தருவதாக ரூ.3.1 கோடி மோசடி செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நீதிபதி பரம்வீர் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை 15 நாட்கள் ஜனவரி 20 வரை நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதனையடுத்து ராஜேந்திர பாலாஜி சிறையில் அடைக்கப்பட்டார்.

ராஜேந்திர பாலாஜி தன்னைக் கைது செய்வதிலிருந்து விலக்குக் கோரி உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கு இன்று விசாரணைக்கு வருவதால் அவரது கைதை ரத்து செய்ய வேண்டும் என்று வாதிடப்பட்டது. ஆனால், அந்த வாதம் தள்ளுபடி செய்யப்பட்டது.

இதற்கிடையில், நேற்று நள்ளிரவில் ராஜேந்திர பாலாஜி கைதுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்த அதிமுகவினர் 100க்கும் மேற்பட்டோரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த அதிமுக ஆட்சியில் பால்வளத்துறை அமைச்சராக இருந்தவரும் விருதுநகர் மாவட்ட அதிமுக மேற்கு மாவட்டச் செயலாளருமான கே.டி.ராஜேந்திர பாலாஜி, ஆவின் நிறுவனம் மற்றும் அரசுத் துறைகளில் வேலை வாங்கி தருவதாக ரூ.3 கோடியே 10 லட்சம் மோசடி செய்ததாக புகார் எழுந்தது. இதுதொடர்பாக கடந்த ஆண்டு நவ.15-ஆம் தேதி விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸார் ராஜேந்திர பாலாஜி மீது வழக்குப்பதிவு செய்தனர்.

டிச.17-ம் தேதி தமிழக அரசை கண்டித்து அதிமுக சார்பில் விருதுநகரில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற கே.டி.ராஜேந்திரபாலாஜி, போலீஸார் அவரை கைது செய்ய முயன்றதை அறிந்து தலைமறைவானார். அவரை பிடிக்க மாவட்ட எஸ்.பி. மனோகர் உத்தரவின்பேரில் 8 தனிப்படைகள் அமைத்து குற்றப் பிரிவு போலீஸார் அவரைத் தேடி வந்தனர். இதனிடையே தனிப்படை போலீஸாருக்கு ராஜேந்திர பாலாஜி க‌ர்நாடக மாநிலம் ஹாசன் மாவட்டத்தில் பதுங்கி இருப்பதாகவும், பாஜக பிரமுகர்கள் உதவியோடு காரில் வலம் வருவதாகவும் ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து அங்கு விரைந்து சென்ற போலீஸார் நேற்று பி.எம்.சாலையில் காரில் சென்ற ராஜேந்திர பாலாஜியை மடக்கினர். போலீஸாரின் வாகனத்தை பார்த்ததும் தப்பியோட முயன்ற அவரை, போலீஸார் சுற்றி வளைத்து கைது செய்தனர்.

இந்நிலையில் அவர் நள்ளிரவு 1.15 மணியளவில் விருதுநகர் அழைத்துவரப்பட்டார். அவரிடம் மதுரை சரக காவல்துறை டிஐஜி காமினி, மாவட்ட எஸ்.பி. மனோகர் உள்ளிட்ட காவல்துறையினர் மூன்று மணி நேரம் விசாரணை நடத்தினர். விசாரணைக்குப் பின்னர் அவர் விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கே அவருக்கு மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x