Published : 05 Jan 2022 10:25 AM
Last Updated : 05 Jan 2022 10:25 AM

தமிழகத்தில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு வழங்க வேண்டும்: முதல்கட்டமாக மாநகராட்சிப் பள்ளிகளில் தொடங்க கல்வியாளர்கள் எதிர்பார்ப்பு

சி.சிவக்குமார்

திருச்சி: தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் மாணவர்களுக்கு காலை உணவு வழங்கவும், முதல்கட்டமாக இத்திட்டத்தை மாநகராட்சிப் பள்ளிகளில் தொடங்கவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கல்வியாளர்கள் எதிர்பார்க்கின்றனர்.

தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மதிய நேரத்தில் மாணவர்களுக்கு சத்துணவு வழங்கப்பட்டாலும், ஏழை, கூலித் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு பெரும்பாலும் காலை உணவு முழு அளவில் கிடைப்பது இல்லை. இதனால், அவர்கள் வகுப்பில் முழு கவனம் செலுத்த முடியவில்லை என்கின்றனர் கல்வியாளர்கள்.

பெரும்பாலும் நகர்ப்புறங்களில் உள்ள ஏழைகள் மற்றும் கூலித் தொழிலாளர்கள் அதிகாலையிலேயே பணிக்குச் செல்ல வேண்டிய சூழலில் உள்ளனர். இதனால், அவர்களால் தங்களது குழந்தைகளுக்கு காலை உணவை முழுமையாக வழங்க முடிவதில்லை என அவர்கள் தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து கல்வியாளரும், காஞ்சிபுரம் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன ஓய்வு பெற்ற முதல்வருமான சி.சிவக்குமார் ‘இந்து தமிழ்’ நாளிதழிடம் கூறியதாவது:

கிராமப்புறங்களில் உள்ள ஏழை கூலித் தொழிலாளர்கள் வேலைக்காக நகர்புறங்களை நோக்கி அதிகளவில் வந்துவிட்டனர். பெரும்பாலானோர் கட்டுமானம், வீட்டு வேலை, சுமை தூக்கும் பணி உள்ளிட்ட பல்வேறு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்கள் தினந்தோறும் அதிகாலையிலேயே வேலைக்குச் சென்றுவிடுகின்றனர். இதனால், இவர்களால் தங்களது குழந்தைகளுக்கு முழு அளவில் காலை உணவை வழங்க முடிவதில்லை.

காலையில் உட்கொள்ளும் உணவுதான் அன்றைய நாள் முழுவதும் உழைப்பதற்கான சக்தியை உடலுக்கு தருகிறது. ஆனால், இது ஏழைக் குழந்தைகளுக்கு பெரும்பாலும் கிடைப்பதில்லை. காலை உணவை உட்கொள்ளாத குழந்தைகள் வகுப்பில் சோர்வாகவும், படிப்பில் போதிய கவனமின்றியும் இருக்கின்றனர்.

திருச்சி கி.ஆ.பெ. விசுவநாதம் பள்ளியில் மாணவர்களுக்கு காலையில் கஞ்சி வழங்கும் திட்டத்தை ஆசிரியர்களே செயல்படுத்தினர். அதன் பின்பு, நாட்டிலேயே முன்னோடியாக ஆசிரியர்கள், நன்கொடையாளர்கள் பங்களிப்போடு சமுதாய காலை உணவுத் திட்டம், திருச்சி தஞ்சம்மாள் நினைவு தொடக்கப் பள்ளியில் 2007-ல் தொடங்கப்பட்டு, தற்போது திருச்சி மாநகரில் ஏறத்தாழ 25 பள்ளிகளில் மக்கள் பங்களிப்புடன் காலை உணவு வழங்கப்பட்டு வருகிறது.

எனவே, பள்ளிகளில் மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கப்படுவது போல, காலை உணவையும் அரசுப் பள்ளிகளில் பயிலும் ஏழை, எளிய மாணவர்களுக்கு வழங்க தமிழக அரசு முன்வர வேண்டும். இதில், முதல்கட்டமாக மாநகராட்சிகளில் உள்ள பள்ளிகளில் இத்திட்டத்தை தொடங்கலாம். இதற்கு அம்மா உணவகங்களைக் கூட பயன்படுத்திக் கொள்ளலாம். குழந்தைகளுக்கு இங்கிருந்து காலை உணவை எடுத்துச் சென்று வழங்கலாம்.

மேலும், இதற்கு பெரும் நிதி தேவைப்படும் என யோசிக்க வேண்டியதில்லை. அரசு ஒரு அறிவிப்பு செய்தால், அந்தந்த நகரங்களில் உள்ள தொழிலதிபர்கள், வசதி படைத்தவர்கள் தங்கள் குடும்பத்தாரின் பிறந்தநாள், தாய், தந்தையரின் பிறந்தநாள் மற்றும் நினைவு நாட்களில் குழந்தைகளுக்கு காலை உணவை வழங்க முன்வருவார்கள்.

மேலும், பெரு நிறுவனங்களின் சமூக பொறுப்புணர்வுத் திட்டத்தில் இருந்து இந்த திட்டத்துக்கான நிதியை சேகரித்து, குழந்தைகளுக்கு காலை உணவை நிறைவாக வழங்கலாம்.

இந்த திட்டத்தை தமிழக அரசு பரிசீலனை செய்து, ஏழை, எளிய குழந்தைகளுக்கு காலை உணவை பள்ளியிலேயே வழங்கினால் மாணவர்களின் இடைநிற்றலை தவிர்ப்பதோடு, எதிர்கால சமுதாயம் ஆரோக்கியத்திலும், கல்வியிலும் சிறந்ததாக அமையும் என்பதில் ஐயமில்லை என்றார்.

காலை உணவுதான் நாள் முழுவதும் உழைப்பதற்கான சக்தியை உடலுக்கு தருகிறது. ஆனால், இது ஏழைக் குழந்தைகளுக்கு பெரும்பாலும் கிடைப்பதில்லை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x