Published : 05 Jan 2022 09:46 AM
Last Updated : 05 Jan 2022 09:46 AM

வணிகவியல் டிப்ளமா முடிப்பவர்கள் பி.காம். 2-ம் ஆண்டு சேரலாம்: கலைக் கல்லூரிகளில் கூடுதலாக 10% இடங்கள் ஏற்படுத்த உத்தரவு

சென்னை: வணிகவியல் டிப்ளமா படித்த மாணவர்கள் நேரடியாக 2-ம் ஆண்டு பி.காம். படிப்பில் சேரும் `லேட்ரல் என்ட்ரி' முறை அடுத்த கல்வியாண்டில் அறிமுகப்படுத்தப்படுகிறது. இதற்காக, ஒவ்வொரு கலை, அறிவியல் கல்லூரியிலும் பி.காம். படிப்பில் கூடுதலாக 10 சதவீத இடங்கள் உருவாக்க அரசு ஆணையிட்டுள்ளது.

பாலிடெக்னிக் கல்லூரிகளில் வணிகவியல் டிப்ளமா படிப்பு, மாடர்ன் ஆஃபீஸ் மேனேஜ்மென்ட் டிப்ளமா படிப்பு ஆகிய 3 ஆண்டு படிப்பில் 10-ம் வகுப்பு முடித்தவர்கள் சேரலாம். பிளஸ் 2 முடித்தவர்கள் நேரடியாக 2-ம் ஆண்டு சேர்ந்து படிக்கலாம். படிக்கும்போது தட்டச்சு தமிழ் அல்லது ஆங்கிலம் படிக்கலாம். படிப்பை முடிக்கும்போது அவர்களுக்கு ஹையர் கிரேடு சான்றிதழ் அளிக்கப்படுகிறது.

இந்நிலையில், கடந்த பட்ஜெட் கூட்டத்தொடரின்போது, வணிகவியல் டிப்ளமா, வணிகவியல் மற்றும் கணினி பயன்பாடு டிப்ளமா படித்தவர்கள், கலை, அறிவியல் கல்லூரிகளில் நேரடியாக 2-ம் ஆண்டு பி.காம். படிப்பில் சேர (லேட்ரல் என்ட்ரி) வழிவகை செய்யப்படும் என்று உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பொன்முடி அறிவித்தார்.

இது தொடர்பாக உயர்கல்வித் துறை முதன்மைச் செயலர் தா.கார்த்திகேயன் வெளியிட்டுள்ள அரசாணையில் கூறியிருப்பதாவது: வணிகவியல் பயிற்சி மற்றும் நவீன அலுவலக பயிற்சி தொடர்பான டிப்ளமா படிப்புகளை முடிக்கும் மாணவர்கள், பி.காம். படிப்பில் நேரடியாக 2-ம் ஆண்டு சேர வகை செய்யும் லேட்ரல் என்ட்ரி முறை 2022-2023-ம் கல்வியாண்டில் அறிமுகப்படுத்தப்படுகிறது.

இந்த மாணவர்கள், அனைத்து கலை, அறிவியல் கல்லூரிகளிலும், அனைத்து வகை பி.காம். பாடப் பிரிவுகளிலும் சேரலாம். அவர்களுக்காக அனைத்து கலை, அறிவியல் கல்லூரிகளிலம் கூடுதலாக 10 சதவீத இடங்கள் உருவாக்கப்பட வேண்டும்.

டிப்ளமா படிப்பின்போது மொழித்தாள்-1 (தமிழ்) படிக்காதவர்கள், பி.காம். படிப்பு காலத்துக்குள் மொழித்தாள் தேர்ச்சி பெற வேண்டும். லேட்ரல் என்ட்ரி முறையில் பி.காம். சேரும் வணிகவியல் டிப்ளமா மாணவர்களுக்கு, கிரேடு அல்லது வகுப்பு குறிப்பிட்டு பட்டம் வழங்கப்படும். அனைத்து பல்கலைக்கழகங்களும் இதை நடைமுறைப்படுத்துமாறு அறிவுறுத்தப்படுகிறது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தொழில்நுட்பக் கல்வி இயக்குநர் ஜி.லட்சுமி பிரியாவிடம் கேட்டபோது "அரசு ஆணையின்படி ஒவ்வொரு கல்லூரியிலும் பி.காம். படிப்பில் கூடுதலாக 10 சதவீத இடங்கள் ஏற்படுத்தப்படும். தமிழகத்தில் ஆண்டுதோறும் சுமார் 500 மாணவர்கள் வணிகவியல் டிப்ளமா படிக்கிறார்கள். அவர்களுக்கு இந்த லேட்ரல் என்ட்ரி முறை பயனுள்ளதாக இருக்கும்" என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x