Published : 05 Jan 2022 09:34 AM
Last Updated : 05 Jan 2022 09:34 AM

முதுநிலை பொறியியல் படிப்புகளுக்கான கல்வி உதவித்தொகை பெறுவதற்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் நீட்டிப்பு

சென்னை: அகில இந்திய தொழில்நுட்பக்கல்வி குழுமத்தின் (ஏஐசிடிஇ) உறுப்பினர் செயலர் ராஜீவ் குமார் வெளியிட்ட அறிவிப்பு; ஏஐசிடிஇ அங்கீகாரம் பெற்ற உயர்கல்வி நிறுவனங்களில் கேட் அல்லது ஜிபிஏடி நுழைவுத்தேர்வு அடிப்படையில் சேர்க்கை பெற்ற மாணவர்களுக்கு மாதந்தோறும் கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது.

அதன்படி பொறியியல், தொழில்நுட்பம், கட்டிடவியல், பார்மசி ஆகிய படிப்புகளில் முதுநிலை மாணவர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம். தகுதிபெறும் மாணவர்களுக்கு 2 ஆண்டுக்கு மாதந்தோறும் ரூ.12,400 உதவித்தொகையாக வழங்கப்படும்.

இந்த சூழலில் நடப்பாண்டுக்கான விண்ணப்பப் பதிவு கடந்த அக்டோபர் மாதம் தொடங்கி டிசம்பர் 31-ம் தேதி நிறைவு பெற்றது.

தற்போது பல்வேறு தரப்பின் கோரிக்கைகளை ஏற்று கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிப்பதற்கான காலஅவகாசம் ஜன. 31-ம் தேதி வரை நீட்டிக்கப்படுகிறது.

இதையடுத்து தகுதிபெற்ற மாணவர்கள் https:/ /-pgscholarship.aicte-india.org/ என்ற இணையதளம் வழியாக துரிதமாக விண்ணப்பிக்க வேண்டும்.

அதன் பின்னர் விண்ணப்பித்த மாணவர்களின் விவரங்களை கல்லூரிகள் பிப்ரவரி 15-ம் தேதிக்குள் சரிபார்த்து அனுப்ப வேண்டும். இதுதவிர விண்ணப்பிக்கும் போது வங்கிக்கணக்கு விவரங்களை சரியாக குறிப்பிட வேண்டும்.

மேலும், முதுநிலை பட்டப்படிப்பை பகுதிநேரம், தொலைத்தூர அடிப்படையில் பயிலும் மாணவர்கள் உதவித்தொகை பெற முடியாது. கூடுதல் விவரங்களை https://www.aicte-india.org/ என்ற வலைதளத்தில் அறிந்து கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x