மசாஜ் சென்டர்களில் கேமரா பொருத்துவது தனிநபர் உரிமைக்கு எதிரானது: உயர் நீதிமன்றம் கருத்து 

மசாஜ் சென்டர்களில் கேமரா பொருத்துவது தனிநபர் உரிமைக்கு எதிரானது: உயர் நீதிமன்றம் கருத்து 
Updated on
1 min read

மதுரை: ஸ்பா, மசாஜ் சென்டர்களில் சிசிடிவி கேமரா பொருத்துவது தனிநபர் உரிமைக்கு எதிரானது என உயர் நீதிமன்ற மதுரைக் கிளை கருத்து தெரிவித்துள்ளது.

திருச்சியைச் சேர்ந்தவர் பயேல் பிஸ்வாஸ். இவர் திருச்சி தில்லை நகர் அண்ணா நகரில் குயின் ஆயுர்வேதிக் கிராஸ் ஸ்பா சென்டர் என்ற பெயரில் ஸ்பா நடத்த தடையில்லாச் சான்றிதழ் வழங்க போலீஸாருக்கு உத்தரவிடக் கோரி உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத்தாக்கல் செய்தார்.

இந்த மனுவை விசாரித்து நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவு:

''ஸ்பா தொழிலை முறைப்படுத்தச் சட்டம் இல்லாமல் இருந்தது. ஸ்பா தொழிலுக்கு அரசிடம் இருந்து உரிமம் பெற வேண்டியதில்லை. 2018-ல் ஸ்பா தொழில் நடத்தக் கட்டாயம் உரிமம் பெற வேண்டும் என அரசு உத்தரவிட்டது. அதன்படி மனுதாரர் உரிமம் மற்றும் தடையில்லாச் சான்றிதழ் கேட்டு நீதிமன்றம் வந்துள்ளார்.

அரசு வழக்கறிஞர் வாதிடுகையில், சென்னை உயர் நீதிமன்றத்தில் ஸ்பா தொடர்பான வழக்கை விசாரித்த தனி நீதிபதி, ஸ்பா, மசாஜ் மற்றும் தெரபி சென்டர்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தவும், அந்த கேமராக்கள் இயங்கும் நிலையில் இருப்பதை உறுதிப்படுத்தவும் டிஜிபிக்கு உத்தரவிட்டிருப்பதாகத் தெரிவித்தார்.

ஸ்பா, மசாஜ் சென்டர் போன்ற இடங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்துவது தனிநபர் உரிமையைப் பறிக்கும் செயலாகும். மேலும் இது தனியுரிமை தொடர்பாக உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு எதிரானதாக உள்ளது.

ஸ்பா சென்டர்களில் ஆட்கள் நுழையும், வெளியேறும் பகுதிகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தலாம். இந்த விவகாரத்தில் தனிநபர் உரிமை பாதிக்கப்படாத வகையில் அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இந்த வழக்கைப் பொறுத்தவரை மனுதாரரின் மனுவை போலீஸார் 4 வாரங்களில் பரிசீலித்து தடையில்லாச் சான்று வழங்குவது குறித்து முடிவெடுக்க வேண்டும்''.

இவ்வாறு நீதிபதி உத்தரவில் கூறியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in