Last Updated : 04 Jan, 2022 04:53 PM

 

Published : 04 Jan 2022 04:53 PM
Last Updated : 04 Jan 2022 04:53 PM

புதுச்சேரியில் அதிகரிக்கும் கரோனா: புதிதாக 66 பேருக்குத் தொற்று உறுதி

புதுச்சேரி: புதுச்சேரியில் கரோனா தொற்று மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ள நிலையில் புதிதாக 66 பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தற்போது 214 பேர் சிகிச்சையில் இருந்து வருகின்றனர். அதே நேரத்தில் 14.10 லட்சம் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்துப் புதுச்சேரி சுகாதாரத்துறை இன்று (ஜன. 4) வெளியிட்ட தகவலில், ‘‘புதுச்சேரி மாநிலத்தில் 3,420 பேருக்குப் பரிசோதனை செய்யப்பட்டது. இதில் புதுச்சேரியில் 45 பேர், காரைக்காலில் 13 பேர், ஏனாமில் ஒருவர், மாஹேவில் 7 பேர் என மொத்தம் 66 பேருக்கு (1.93 சதவீதம்) கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனால் மாநிலத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 1 லட்சத்து 29 ஆயிரத்து 619 ஆக அதிகரித்துள்ளது. இதில் தற்போது மருத்துவமனைகளில் 50 பேரும், வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் 164 பேரும் என மொத்தமாக 214 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

மேலும் உயிரிழப்பு இல்லை. இதனால் இறந்தவர்களின் எண்ணிக்கை 1,881 ஆகவும், இறப்பு விகிதம் 1.45 சதவீதமாகவும் இருக்கிறது. புதிதாக 7 பேர் மட்டுமே சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். இதன் மூலம் குணமடைந்தோரின் எண்ணிக்கை 1 லட்சத்து 27 ஆயிரத்து 524 (98.38 சதவீதம்) ஆக உள்ளது.

இதுவரை சுகாதாரப் பணியாளர்கள், முன்களப் பணியாளர்கள், பொதுமக்கள் என 14 லட்சத்து 10 ஆயிரத்து 815 (2 டோஸ் உட்பட) தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரியில் கரோனா தொற்று ஒருநாள் பாதிப்பு 10க்கும் குறைவாக இருந்த நிலையில், அது தற்போது கடந்த 3 தினங்களாக அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இதனால் நேற்று ஒருநாளில் மட்டும் 66 பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே கரோனாவில் இருந்து பாதுகாத்துக்கொள்ள மக்கள் முகக்கவசம் அணிவது, தனிமனித இடைவெளியைக் கடைப்பிடிப்பது, கைகளை அடிக்கடி சுத்தம் செய்வது உள்ளிட்ட விதிமுறைகளைக் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும்’’ என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x