

சென்னை: "தமிழகத்துக்கு ஹைட்ரோ கார்பன் திட்டம் தேவையில்லை" என்று பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் கருத்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அன்புமணி ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில், “தமிழகத்தின் காவிரி பாசன பகுதியில் விழுப்புரம் - கடலூர் மாவட்டத்தையொட்டிய ஆழ்கடல் பகுதியில் 8108 சதுர கி.மீ பரப்பளவிலான ஹைட்ரோகார்பன் திட்டம் உட்பட மொத்தம் 8 திட்டங்களுக்கு மத்திய அரசு ஏலப்புள்ளிகளை கோரியுள்ளது. இவற்றில் தமிழகத்திற்கான திட்டம் தேவையற்றது.
தமிழ்நாட்டில் ஏற்கெனவே 7264 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் ஹைட்ரோ கார்பன் திட்டங்களை செயல்படுத்த 5 உரிமங்களை மத்திய அரசு வழங்கியுள்ளது. இவற்றில் பெரும்பாலானவை காவிரி பாசன மாவட்டங்களில் உள்ளன. அவற்றை செயல்படுத்த மக்களிடம் எதிர்ப்பு எழுந்துள்ளது.
புதிதாக, மேலும் திட்டம் தேவையில்லை. அத்திட்டம் ஆழ்கடலில் செயல்படுத்தப்பட்டாலும் அதன் தாக்கம் நிலப்பரப்பிலும் இருக்கும். அது காவிரி படுகையில் விவசாயத்தை பாதிக்கும். அதனால் புதிதாக அறிவிக்கப்பட்டுள்ள காவிரி பேசின் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ஏலப் பட்டியலில் இருந்து நீக்க வேண்டும்” என்று அன்புமணி பதிவிட்டுள்ளார்.