Published : 04 Jan 2022 07:52 AM
Last Updated : 04 Jan 2022 07:52 AM
சென்னை: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 2 நாட்களுக்கு வறண்ட வானிலை நிலவ வாய்ப்புள்ளது.
இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் நா.புவியரசன் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:
தமிழகம் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் வரும் 4, 5-ம் தேதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும். 6, 7-ம் தேதிகளில் தென்தமிழக கடலோர மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இதர மாவட்டங்களில் வறண்ட வானிலையே நிலவும்.
மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் உள் மாவட்டங்களில் 4, 5-ம் தேதிகளில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும். சென்னையில் அடுத்த 48 மணி நேரத்தில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
3-ம் தேதி காலை 8.30 மணி யுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரத்தில் 10 செமீ, பாம்பன், மண்டபம், தங்கச்சிமடம் ஆகிய இடங்களில் தலா 5 செமீ மழை பதிவாகியுள்ளது.
மீனவர்களுக்கு எச்சரிக்கை
4-ம் தேதி குமரிக்கடல், மன்னார் வளைகுடா பகுதிகளில் மணிக்கு 40 முதல் 50 கிமீ வேகத்தில் பலத்த காற்று வீசக் கூடும். எனவே மீனவர்கள் இப்பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம்.
இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT