

சென்னை: பொங்கல் பண்டிகைக்கு தமிழகத்தில் உள்ள 2.15 கோடி அரிசி குடும்ப அட்டைகள் மற்றும் இலங்கைத் தமிழர்களுக்கு 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் பணியை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்.
தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையை அனைவரும் மகிழ்ச்சியுடன் கொண்டாடும் வகையில் தமிழகத்தில் உள்ள 2 கோடியே 15 லட்சத்து 29,114 அரிசி குடும்பஅட்டைதாரர்கள், 18,946 இலங்கை தமிழர் குடும்பங்கள் என 2 கோடியே 15 லட்சத்து 48 ஆயிரத்து 60 குடும்பங்களுக்கு, பயனாளி ஒருவருக்கு ரூ.505 மதிப்புள்ள 21 பொருட்கள் வழங்கரூ.1,088 கோடியே 17 லட்சத்து 70 ஆயிரத்து 300 ஒதுக்கப்பட்டுள்ளது.
21 பொருட்கள்
இதில், தலா ஒரு கிலோ பச்சரிசி, வெல்லம், கோதுமை மாவு, ரவை, தலா 50 கிராம் முந்திரி, திராட்சை,10 கிராம் ஏலக்காய், தலா 500 கிராம்உளுந்து, பாசிப்பருப்பு, உப்பு, தலா 100 கிராம் நெய், மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், மல்லித்தூள், கடுகு, சீரகம், 50 கிராம் மிளகு, 200 கிராம் புளி, 250 கிராம் கடலைப் பருப்பு, துணிப்பை ஒன்று என 20 பொருட்களும், ஒரு கரும்பும் என 21 பொருட்கள் வழங்கப்படுகின்றன.
குறிப்பாக கூட்டுறவுத் துறை மூலம் ஏலம், முந்திரி, திராட்சைமற்றும் கரும்பு ஆகியவை கொள்முதல் செய்து நியாயவிலைக் கடைகள் மூலம் 21 பொருட்களை யும் வழங்குவதற்கான, டோக்கன் வழங்கும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், இத்திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று காலை 10.30 மணிக்கு தலைமைச் செயலகத்தில் தொடங்கி வைக்கிறார்.
இதைத்தொடர்ந்து, மாவட்டவாரியாக அமைச்சர்கள் தொடங்கிவைக்கின்றனர். விடுதல் இல்லாமல் அனைவருக்கும் பொங்கல் பரிசுத் தொகுப்பை வழங்க உத்தர விடப்பட்டுள்ளது.