

திருச்செந்தூரை சேர்ந்த மாற்றுத்திறனாளி முருகானந்தம் என்பவர் பொதுமக்களுக்கு இலவசமாக 600 மஞ்சள் பைகளை விநியோகம் செய்தார்.
திருச்செந்தூர் முத்தாரம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் எஸ்.முருகானந்தம் (42). மாற்றுத்திறனாளியான இவர் 600 மஞ்சள் பைகளை தயார் செய்துள்ளார். இந்த பைகளை மக்களுக்கு இலவசமாக விநியோகம் செய்யும் பணியை, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் கி.செந்தில்ராஜ் நேற்று தொடங்கி வைத்தார்.
அங்கிருந்த அலுவலர்கள், ஊழியர்கள் மற்றும் பொதுமக்களுக்கு இலவசமாக மஞ்சள் பைகளை முருகானந்தம் விநியோகம் செய்தார். அவர் கூறியதாவது: பிளாஸ்டிக் மற்றும் பாலித்தீன் பைகள் பயன்பாடுகள் காரணமாக சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் பாதிப்பை தடுக்கும் வகையில் 'மீண்டும்மஞ்சப்பை' என்ற சிறப்பான திட்டத்தை தமிழக முதல்வர் அறிமுகம்செய்துள்ளார். இந்த திட்டம் குறித்து மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் மஞ்சள் பைகளை தயாரித்து மக்களுக்கு விநியோகம் செய்துள்ளேன்.
கார்களை சுத்தம் செய்யும் பணி, டெக்கரேசன் பணி போன்ற சிறிய வேலைகளை செய்வேன். அதில் கிடைக்கும் வருவாயை கொண்டு தான் இந்த பைகளை தயார் செய்துள்ளேன். தொடர்ந்து அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் சென்று மஞ்சள் பைகளை விநியோகம் செய்யவுள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்.