Last Updated : 03 Jan, 2022 04:26 PM

 

Published : 03 Jan 2022 04:26 PM
Last Updated : 03 Jan 2022 04:26 PM

'மக்கள் சக்தி ஒன்று சேர்ந்தால்...' - அண்ணாமலைக்கு துரை வைகோ பதில்

மதுரை: ”தமிழகத்திற்கான திட்டங்கள், நிதியை வழங்க மறுத்தால் மத்திய அரசை எதிர்போம்” என மதுரையில் மதிமுக தலைமை நிலையச் செயலர் துரை வைகோ கூறினார்.

சுதந்திர போராட்ட வீரரும், தியாகியுமான வீரபாண்டிய கட்டபொம்மனின் 236-வது பிறந்த நாளையொட்டி மதுரை பெரியார் பேருந்து நிலையம் அருகிலுள்ள அவரது சிலைக்கு மாலை அணி விக்கும் நிகழ்ச்சி நடந்தது. அரசியல், சமுதாய அமைப்பினர் மாலை அணிவித்தனர். மதிமுக தலைமை நிலையச் செயலர் துரை வைகோ, சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது, "தியாகம், வீரத்தால் நீங்காத புகழைப் பெற்றவர், விடுதலை விதையை முதலில் விதைத்தவர் கட்டபொம்மன். அவரது புகழ் என்றும் வாழ வேண்டும். இந்த மண்ணுக்கு எல்லா நிறமும், மக்களும் தேவை. கருப்பு, சிவப்பு, நீலம் ஆகிய நிறங்கள் சேர்ந்து பாஜக தோற்கடிப்போம் என கூறிய திமுக நிர்வாகி ஆ.ராசாவுக்கு பதிலளித்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, எத்தனை கட்சிகள் ஒன்று சேர்ந்தாலும், எங்களை தோற்கடிக்க முடியாது என்கிறார். அவரோ, நானோ தீர்மானிக்க முடியாது. மக்கள் சக்தி ஒன்று சேர்ந்தால் யார் வேண்டுமானாலும் வெற்றி பெறலாம்.

நகர்புற உள்ளாட்சித் தேர்தலுக்கு தயாராகியுள்ளோம். அனைத்து மாவட்டங்களிலும் விருப்ப மனுக்கள் வாங்கியுள்ளோம். ஒமைக்ரான் பரவலால் தேர்தல் தள்ளிப் போகலாம். எப்போது, வந்தாலும், கூட்டணி தலைமையிடம் பேசி தேர்தலை சந்திப்போம். தேசிய பேரிடர் பாதிப்புக்கென 6 மாநிலங்களுக்கு ரூ.3,000 கோடியை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது. தமிழகத்திற்கு முதல்வர் ரூ.6,000 கோடி நிதி கேட்டுள்ளார். பல்வேறு மாவட்டங்களில் பேரிழவு நடந்துள்ளது. இதற்கு மத்திய அரசு முறையாக பதிலளிக்கவில்லை.

பாஜக ஆளும் மாநிலங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. தமிழக எம்பிக்கள் கொண்ட நாடாளுமன்றக் குழு மத்திய அமைச்சர் அமித் ஷாவை சந்திக்க நேரம் கேட்டும் உடனே ஒதுக்கவில்லை. எல்லா மாநிலங்களுக்கும் பொதுவான முறையில் தேவையான நிதியை ஒதுக்க வேண்டுமே தவிர, பாஜக ஆளும் மாநிலங்களுக்கென தனிப்பட்ட எண்ணம்,பாரபட்சம் இருக்கக் கூடாது. இந்திய பிரதமராக தமிழகத்திற்கு வரும்போது, மோடியை வரவேற்கிறோம். தமிழகத்திற்கான திட்டம், நிதியை மறுத்தால் எதிர்போம். தமிழகத்தை மாற்றான் தாய் போன்று மத்திய அரசு பார்க்கக்கூடாது" என்றார் துரை வைகை.

இந்நிகழ்ச்சியில் மதிமுக மாநகர் மாவட்ட செயலர் புதூர் பூமிநாதன் எம்எல்ஏ உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x