Published : 03 Jan 2022 03:14 PM
Last Updated : 03 Jan 2022 03:14 PM

மழை நாள்; போக்குவரத்து நெரிசலில் சிக்கிய ஆம்புன்ஸ் செல்ல உதவி புரிந்த சம்பவம்: ஜின்னாவுக்கு கமல் பாராட்டு

கமல்ஹாசன் | கோப்புப்படம்.

சென்னை: கடந்த டிசம்பர் 31ஆம் தேதி அன்று மழை நாளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதைத் தொடர்ந்து வாகன நெரிசலில் சிக்கிய ஆம்புன்ஸ் செல்ல வழி ஏற்படுத்தி உதவி புரிந்த ஜின்னாவுக்கு கமல் பாராட்டு தெரிவித்துள்ளார்.

வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி காரணமாக கடந்த வாரம் டிசம்பர் 31ஆம் தேதி அன்று சென்னையில் திடீர் மழை பெய்து, சில மணி நேரங்களிலேயே நகரச் சாலைகளைத் தத்தளிக்க வைத்தது. சாலைகள் வெள்ளக்காடானதை அடுத்து போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. கட்டுக்கடங்காத வாகன நெரிசல் காரணமாக வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. மருத்துவமனையை நோக்கி அவசரமாகச் சென்றுகொண்டிருந்த வாகனமும் போக்குவரத்து நெரிசலில் சிக்கியிருந்தது. உடன் இரண்டு ஆம்புலன்ஸ் வாகனங்களும் வேகமாகச் செல்ல வழியின்றி நின்றிருந்தன.

அப்போது தனது இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்த ஜின்னா என்பவர் ஆம்புலன்ஸ் வாகனங்களின் அவசர அவசியத்தை உணர்ந்து, மழை என்றும் பாராமல் அண்ணா சாலையில் இறங்கி போக்குவரத்தைச் சரிசெய்ய முனைந்தார். இவர் தனியார் வங்கி ஒன்றில் மேலாளராகப் பணியாற்றி வருபவர்.

மேலும், அந்த இடத்தில் மட்டும் போக்குவரத்தைச் சரிசெய்து உதவி புரிந்துவிட்டு கிளம்பிவிடாமல், சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனை வரையில் சுமார் 4 கி.மீ. தொலைவுக்கு அவ்வழியே சிக்கியிருந்த போக்குவரத்து நெரிசலை நடந்தே சரிசெய்தபடி ஆம்புன்ஸ் வாகனங்களை வழிநடத்திச் சென்றார். இதனைப் பார்த்த சாலையில் சென்றுகொண்டிருந்த மக்கள் ஜின்னாவைப் பாராட்டியுள்ளனர். இந்த வீடியோ வலைதளங்களில் வெளியிடப்பட்டதால் பல்வேறு தரப்பினரும் பார்த்து நெகிழ்ச்சி அடைந்தனர்.

ஆம்புலன்ஸ் வாகனங்கள் உரிய நேரத்தில் செல்ல உதவி புரிந்த ஜின்னாவின் செயலுக்கு மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசன் பாராட்டு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ''விபரீத அளவில் மழையும் பொழிந்து சென்னை சாலைப் போக்குவரத்தும் ஸ்தம்பித்து நின்ற நாள். உயிர் காக்கும் ஆம்புலன்ஸுக்கு ஒற்றை மனிதராக வழியேற்படுத்திக் கொடுத்திருக்கிறார் ஜின்னா. இக்கட்டான சமயத்தில், திடமிருப்போர் எப்படிச் செயல்படவேண்டும் என்று வழிகாட்டியிருக்கும் அவருக்கு வாழ்த்துகள்'' என்று கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x