Published : 03 Jan 2022 01:27 PM
Last Updated : 03 Jan 2022 01:27 PM

கரோனா உயிரிழப்பு; வாரிசுதாரர்கள் ரூ.50 ஆயிரம் உதவித்தொகை பெற செய்ய வேண்டியது என்ன?-சென்னை ஆட்சியர் அறிவிப்பு

சென்னை: கரோனா நோய்த் தொற்றில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் வாரிசுதாரர்களுக்குத் தமிழக அரசின் சார்பில் வழங்கப்படும் ரூ.50,000/- (ரூபாய் ஐம்பதாயிரம்) நிதி உதவி பெறுவதற்கான ஆவணங்கள் சமர்ப்பிக்கும் விவரங்கள் குறித்து சென்னை மாவட்ட ஆட்சித் தலைவர் ஜெ.விஜயா ராணி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக நேற்று அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில், ''கரோனா நோய்த்தொற்று காரணமாக உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முழுமையான ஆவணங்களைத் தாக்கல் செய்யும்பட்சத்தில் ரூ.50 ஆயிரம் உதவித்தொகை வழங்கப்படும் என தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

சென்னை மாவட்டத்தில் கரோனா பெருந்தொற்றினால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் வாரிசுதாரர்களுக்குத் தமிழக அரசின் நிதி உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. பெருநகர சென்னை மாநகராட்சியிடம் உள்ள பதிவுகளின்படி 8,348 நபர்கள் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டு இறந்துள்ளனர். இதுவரை வருவாய்த்துறை அலுவலர்கள் கள ஆய்வு மேற்கொண்டும். பொதுமக்கள் தாங்களாகவே முன்வந்தும் 6888 விண்ணப்பங்கள் இணைய வழியில் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதில் அனைத்து ஆவணங்களும் சரியாக பதிவேற்றம் செய்யப்பட்ட 3638 நபர்களுக்கு ரூ.50,000/- (ரூபாய் ஐம்பதாயிரம்) மின்னனு பரிவர்த்தனை மூலம் நிவாரணத் தொகை வழங்கப்பட்டுள்ளது.

மின்னனு பரிவர்த்தனை மூலம் ரூ.50,000/- (ரூபாய் ஐம்பதாயிரம்) நிவாரணத் தொகை வழங்கப்பட்டுள்ள விவரம் https://chennai.nic.in/ என்ற இணையதள முகவரியில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. மீதமுள்ள விண்ணப்பங்கள் வாரிசு மற்றும் சட்டரீதியான பிரச்சினைகள் காரணமாகவும், முழுமையான முகவரி இல்லாததனாலும், வெளி மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் என்பதாலும், கள ஆய்வின்போது வேறு முகவரிக்குக் குடிபெயர்ந்து சென்றதாலும், மக்களாகவே முன்வந்து இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்ட இனங்களில் முழுமையாக மருத்துவ ஆவணங்கள் சமர்ப்பிக்காததாலும் அரசு வழங்கும் நிதி உதவியை வழங்க இயலாத நிலை உள்ளது.

எனவே கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் வாரிசுதாரர்கள் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலக 7-வது மாடியிலுள்ள பேரிடர் மேலாண்மைப் பிரிவிலோ அல்லது 1077 என்ற இலவச எண்ணையோ அல்லது கீழ்க்கண்ட தொலைபேசி எண்களில் சம்பந்தப்பட்ட வருவாய் வட்டாட்சியர்களைத் தொடர்புகொண்டோ கரோனா பரிசோதனை செய்யப்பட்டதற்கான ஆவணம், மருத்துவ சிகிச்சைக்கான ஆவணங்கள், மயானச் சான்றிதழ், இறப்புச் சான்றிதழ், வாரிசு சான்றிதழ், வங்கிக் கணக்கு விவரம் போன்ற முழுமையான ஆவணங்களுடன் தாக்கல் செய்து ரூ.50,000 (ரூபாய் ஐம்பதாயிரம்) நிதி உதவியினைப் பெறலாம் எனவும், 18 வயதுக்குக் கீழ் உள்ள குழந்தைகளின் பெற்றோர்களில் ஒருவரை இழந்தோர்; அல்லது இருவரையும் இழந்தோர்; முறையே ரூ.3,00,000/- மற்றும் ரூ.5,00,000/- பெற்றவர்களும் மேற்படி ரூ.50,000/- பெறத் தகுதியுடையவர்கள் என்பதால் அவர்களோ அல்லது அவர்களது பாதுகாவலர்கள் மூலமாகவோ விண்ணப்பிக்கலாம்'' என்று தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x