

நார்த்தாமலை அருகே பசுமலைப்பட்டியில் உள்ள துப்பாக்கி சுடும் பயிற்சிதளத்தை நிரந்தரமாக மூட நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் தெரிவித்தார்.
புதுக்கோட்டை மாவட்டம் நார்த்தாமலை அருகே பசுமலைப்பட்டியில் உள்ள துப்பாக்கி சுடும் பயிற்சி தளத்தில் மத்திய தொழிலக பாதுகாப்பு படையினர் (சிஐஎஸ்எப்) மற்றும் தமிழக போலீஸார் கடந்த டிச.29, 30-ம் தேதிகளில் துப்பாக்கி சுடும் பயிற்சியில் ஈடுபட்டனர்.
அப்போது, டிச.30-ம் தேதி அங்கிருந்து 2 கி.மீ தொலைவில் வீட்டில் இருந்த புகழேந்தி(11) என்ற சிறுவனின் தலையில் துப்பாக்கிக் குண்டு பாய்ந்தது. இதில் பலத்த காயமடைந்த அந்தச் சிறுவனுக்கு தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்துகுண்டு அகற்றப்பட்டது. தொடர்ந்து, சிறுவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், மாநில சுற்றுச்சூழல்- காலநிலை மாற்றத் துறை மற்றும் இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன், எம்எல்ஏக்கள் கந்தர்வகோட்டை எம்.சின்னதுரை, திருவையாறு துரை.சந்திரசேகரன் ஆகியோர் தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு நேற்று சென்று, சிறுவனின் உடல்நிலை குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தனர்.
பின்னர், செய்தியாளர்களிடம் அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் கூறியது: பசுமலைப்பட்டி துப்பாக்கி சுடும் பயிற்சி தளம் தற்போது தற்காலிகமாக மூடப்பட்டுஉள்ளது. முதல்வரின் கவனத்துக்கு கொண்டு சென்று, பயிற்சி தளத்தை நிரந்தரமாக மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.