Published : 03 Jan 2022 07:29 AM
Last Updated : 03 Jan 2022 07:29 AM

முதுநிலை பொறியியல் படிப்புகளுக்கு கலந்தாய்வு இன்று தொடக்கம்

சென்னை

முதுநிலை பொறியியல் படிப்புகளுக்கான கலந்தாய்வு இணையவழியில் இன்று (ஜன. 3) தொடங்குகிறது.

அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் பொறியியல் கல்லூரிகளில் எம்.இ., எம்.டெக்., எம்.ஆர்க்., எம்.பிளான் போன்ற முதுநிலைப் படிப்புகளில் 10,610 இடங்கள் உள்ளன. இந்தப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வை ஆண்டுதோறும் அண்ணா பல்கலைக்கழகம் நடத்தி வருகிறது. இதில் பங்கேற்க கேட் அல்லது டான்செட் தேர்வில் மாணவர்கள் தேர்ச்சி பெற வேண்டும்.

நடப்பாண்டுக்கான கலந்தாய்வு இன்று (ஜன.3) தொடங்கி பிப்ரவரி 1-ம் தேதி வரை இணையவழியில் நடைபெறுகிறது. முதல்கட்டமாகக் வரும் 10-ம் தேதி வரை கேட் தேர்வு அடிப்படையில் கலந்தாய்வு நடைபெறும். பின்நர், டான்செட் தேர்வெழுதிய மாணவர்களுக்கு 11-ம் தேதி கலந்தாய்வு தொடங்குகிறது.

இதில் பங்கேற்க விண்ணப்பக் கட்டணமாக பொதுப் பிரிவு மாணவர்கள் ரூ.300, எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் ரூ.150 செலுத்த வேண்டும். இதுதவிர, கலந்தாய்வு வைப்புத்தொகையாகப் பொதுப் பிரிவினர் ரூ.5,000, எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் ரூ.1,000 செலுத்த வேண்டும். இந்தக் கட்டணம் கல்லூரிகளில் சேர்க்கையின்போது கழித்துக் கொள்ளப்படும். மொத்தம் 10,610 இடங்கள் உள்ள நிலையில் 3,085 பேர் மட்டுமே கலந்தாய்வில் பங்கேற்க உள்ளனர். கலந்தாய்வு தொடங்குவதற்கு முன்னரே 7,525 இடங்கள் காலியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x