Published : 02 Jan 2022 05:51 AM
Last Updated : 02 Jan 2022 05:51 AM

மேல்மருவத்தூரில் ஆங்கிலப் புத்தாண்டு தினத்தையொட்டி ரூ.50 லட்சத்துக்கு நலத்திட்ட உதவிகள்: பங்காரு அடிகளார் வழங்கினார்

மேல்மருவத்தூரில் ஆங்கிலப் புத்தாண்டையொட்டி நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ரூ.50 லட்சத்துக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் 2022-ம் ஆண்டு ஆங்கிலப் புத்தாண்டையொட்டி கலச விளக்கு வேள்வி பூஜை மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றன. இந்த விழா நேற்று முன்தினம் அதிகாலை மங்கள இசையுடன் தொடங்கியது. கருவறை அம்மனுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார ஆராதனைகள் நடைபெற்றன.

மாலையில் கலச விளக்கு வேள்வி பூஜையை ஆதிபராசக்தி ஆன்மிக இயக்கத் தலைவர் லட்சுமி பங்காரு அடிகளார் தொடங்கி வைத்தார். இரவு 11 மணிக்கு புத்தாண்டை வரவேற்கும் விதமாக சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. கருவறை அம்மனுக்கு சரியாக 12 மணிக்கு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது.

இதனைத் தொடர்ந்து நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ரூ.50 லட்சம் மதிப்புள்ள நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. கர்நாடக மாநிலம் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி ஆன்மிக இயக்கம் சார்பில் இந்த நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

இதில் மருத்துவமனை, மாற்றுத் திறனாளி குழந்தைகளுக்கான இல்லம் ஆகியவற்றுக்கு நிதியுதவி வழங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து ரூ.37 லட்சம் மதிப்பில் வாழ்வாதார பொருட்கள் ஏழை மக்களுக்கு வழங்கப்பட்டன. இந்த நிகழ்ச்சியில் பங்காரு அடிகளார் நேரில் பங்கேற்று நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

ஆதிபராசக்தி ஆன்மிக இயக்கத் தலைவர் லட்சுமி பங்காரு அடிகளார், துணைத் தலைவர் தேவி ரமேஷ், அறங் காவலர்கள் ஆஷா அன்பழகன்,உமாதேவி ஜெய் கணேஷ்உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

இதனைத் தொடர்ந்து சித்தர் பீடம் வந்த பங்காரு அடிகளாருக்கு பாதபூஜையுடன் பக்தர்கள் வரவேற்பு அளித்தனர். இதனைத் தொடர்ந்து அன்னதானம் நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை கர்நாடக மாநில மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி ஆன்மிக இயக்க நிர்வாகிகள் ராஜகோபால் மற்றும் உதயகுமார் உள்ளிட்ட பலர் செய்திருந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x