Published : 01 Jan 2022 11:50 AM
Last Updated : 01 Jan 2022 11:50 AM

புத்தாண்டை வரவேற்று கரோனாவுக்கு விடை கொடுப்போம்: முதல்வர் ஸ்டாலின் வீடியோ பதிவு

சென்னை: ஒமைக்ரான் பரவலைத் தொடர்ந்து தமிழக அரசு அறிவித்துள்ள வழிகாட்டு நெறிமுறைகளைக் கடைப்பிடிக்க வழியுறுத்தி முதல்வர் ஸ்டாலின் தனது சமூக வலைதளப் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் அவர் பேசுகையில், "உங்கள் எல்லோருக்கும் என் இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துகள். இந்த 2022-ம் ஆண்டு மிகவும் நன்றாக இருக்க வேண்டும் என்பது தான் நம் எல்லோருடைய எதிர்பார்ப்பு, நம்பிக்கை. அப்படி நன்றாக இருக்க வேண்டும் என்றால் கடந்த ஆண்டுகள் தந்த பாடங்களை நாம் மறந்துவிடக் கூடாது.

கரோனா என்ற நோய்த் தொற்றின் முதலாவது அலை மற்றும் இரண்டாவது அலையிலிருந்து நாம் மீண்டு வந்திருக்கிறோம். குறிப்பாகச் சொல்ல வேண்டும் என்றால், இரண்டாவது அலை உச்சகட்டத்தில் இருந்தபோதுதான், உங்களுடைய முதல்வராக மட்டும் அல்ல, உங்களுடைய நலனுக்கும் நான் பொறுப்பேற்றுக் கொண்டேன். இரண்டாவது அலையைக் கட்டுப்படுத்துவதுதான் என்னுடைய முதல் வேலையாக இருந்தது. என்னுடன் நம் அமைச்சர் பெருமக்கள், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையினர், உள்ளாட்சி நிர்வாகத்தினர், காவல் துறையினர், தூய்மைப் பணியாளர்கள் என்று பல்வேறு துறைகளைச் சார்ந்தவர்கள் இணைந்து நின்று செயல்பட்டார்கள். அதை மறக்கவே முடியாது. அதனால் குறைந்த கால அளவிலேயே, இரண்டாவது அலையைக் கட்டுப்படுத்தினோம். அதற்குப் பொதுமக்களாகிய உங்களுடைய ஒத்துழைப்பும் முக்கியக் காரணமாக இருந்தது.

தடுப்பூசி முகாம்களைத் தொடர்ந்து நடத்தியபோது, அறிவியல் மீது நம்பிக்கை வைத்து ஆர்வத்துடன் வந்து ஊசி போட்டுக் கொண்டீர்கள். உங்களுடைய ஆர்வம் பெரிய விழிப்புணர்வை ஏற்படுத்தியது. அதனால் தடுப்பூசி போட்டவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்தது. கரோனா பரவலையும், இறப்பு எண்ணிக்கையையும் பெருமளவில் கட்டுப்படுத்த முடிந்தது. அதே மாதிரியான ஒரு ஒத்துழைப்பைத்தான் இந்தப் புத்தாண்டில் உங்களிடம் மறுபடியும் நான் எதிர்பார்க்கிறேன்.

கரோனா தொற்று பல உருமாற்றங்களை அடைந்திருக்கிறது. இப்போது ஒமைக்ரான் என்ற பெயரில் அது உலகம் முழுவதும் பரவிக் கொண்டிருக்கிறது. அதனுடைய வேகம் அதிகரித்து இருக்கிறது. அதனால் நாம் இன்னும் கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும். ஒமைக்ரான் பரவலைக் கட்டுப்படுத்த என் தலைமையில் இருக்கக்கூடிய உங்கள் அரசு, தேவையான எல்லா நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது. வெளிநாடுகளிலிருந்தும், பிற மாநிலங்களிலிருந்தும் வருபவர்களுக்கான பரிசோதனை, நம் மாநிலத்தில் அறிகுறி தெரிந்தால் அதற்கான பரிசோதனை, சிகிச்சைக்கான ஆக்சிஜன், படுக்கை, மருந்து அனைத்தும் போதுமான அளவில் இருக்கிறது. கூடுதல் தேவையை யோசித்தும் அதற்கேற்றவாறு முழுமையான ஏற்பாடுகளைச் செய்திருக்கிறோம்.

அதனால் நீங்கள் யாரும் பயப்படத் தேவை இல்லை. உங்கள் ஒத்துழைப்புதான் எங்களுக்குத் தேவைப்படுகிறது. ஒமைக்ரான் பரவலைத் தடுக்க சில கட்டுப்பாடுகளை அரசாங்கம் போட்டிருக்கிறது. அது உங்கள் பாதுகாப்பிற்காகத்தான். அந்தக் கட்டுப்பாடுகளைக் கடைப்பிடியுங்கள். COVID Appropriate Behaviour என்ற கோவிட் காலத்தில் கடைப்பிடிக்க வேண்டிய பழக்கங்களைக் கட்டாயமாக நீங்கள் கடைப்பிடிக்க வேண்டும். கூட்டம் கூடுகின்ற நிகழ்ச்சிகளை தயவுசெய்து தவிர்த்துவிடுங்கள். அவசரத் தேவைகள், அன்றாடப் பணிகளுக்காக வெளியில் போகும்போது போதுமான இடைவெளியைக் கடைப்பிடியுங்கள். சானிடைசர் பயன்படுத்துங்கள் அல்லது சோப்பு போட்டு நன்றாகக் கையைக் கழுவுங்கள். முகக்கவசத்தைக் கட்டாயம் பொதுவெளியில் போட்டுக்கொள்ளுங்கள். அதை எப்போதும் மறந்துவிடாதீர்கள். அது உங்கள் பாதுகாப்பிற்கு மட்டுமல்ல, உங்களைச் சார்ந்திருக்ககூடிய அனைவருடைய பாதுகாப்பிற்காகத்தான்.

தடுப்பூசி போட்டுக் கொள்ளாதவர்கள் இருந்தீர்கள் என்றால், தாமதிக்காமல் போட்டுக்கொள்ளுங்கள். முதல் டோஸ் போட்டவர்கள், உங்களுக்குச் சொல்லப்பட்ட தேதியில் இரண்டாவது டோஸ் போட்டுக்கொள்ளுங்கள். ஜனவரி மாதத்தில் இருந்து மத்திய அரசு, 15 வயதிலிருந்து 18 வயது வரையிலான சிறார்களுக்குத் தடுப்பூசி திட்டத்தைச் செயல்படுத்த அறிவித்திருக்கிறார்கள். தமிழ்நாடு அரசு அந்த திட்டத்தையும் முழுமையாகச் செயல்படுத்தும். உங்கள் வீட்டில் அந்த வயதில் சிறார்கள் இருந்தால், மறக்காமல் தடுப்பூசி முகாமிற்கு அழைத்துச் சென்று ஊசி போட்டுக்கொண்டு வாருங்கள். தடுப்பூசி முழுமையாகப் போட்டிருந்தால், ஒமைக்ரான் நோய்த் தொற்று ஏற்பட்டாலும், அதனுடைய தாக்கம் மிக மிகக் குறைவாகத்தான் இருக்கும் என்று மருத்துவ வல்லுநர்கள் சொல்கிறார்கள்.

அதனால் இதுவரையில் தடுப்பூசி போடாதவர்கள் உடனே கண்டிப்பாகப் போட்டுக் கொள்ளுங்கள். தமிழ்நாட்டு மக்கள் ஒவ்வொருவருடைய உடல் நலனும் உங்களுடைய முதல்வரான எனக்கு மிகவும் முக்கியம். அதற்காகத்தான் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதற்கு தமிழ்நாட்டு மக்களான நீங்கள் நிச்சயமாக ஒத்துழைப்பு தருவீர்கள் என்று எதிர்பார்க்கிறேன். அரசு அறிவித்திருக்கிற வழிகாட்டு நெறிமுறைகளைத் தவறாமல் பின்பற்ற வேண்டும் என்று உங்களுடைய முதல்வராக மட்டுமல்ல, உங்களுடைய அன்புச் சகோதரனாகவும், உங்களில் ஒருவனாகவும், மிகுந்த பணிவோடு நான் கேட்டுக் கொள்கிறேன். மீண்டும் ஒருமுறை புத்தாண்டு வாழ்த்துகளைச் சொல்லிக் கொள்வதுடன், புத்தாண்டில் மகிழ்ச்சியாக இருப்பதைப் போலவே நீங்கள் எல்லோரும் பாதுகாப்பாகவும் இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்" என்று முதல்வர் ஸ்டாலின் பேசியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x