

சென்னை: ஒமைக்ரான் பரவுவதால் அதிக தளர்வுகள் அளிக்க விரும்பவில்லை என்று சுகாதாரத்துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் ஒமைக்ரான் பரவல் அதிகரித்து வருகிறது. அன்றாட கரோனா பாதிப்பும் அதிகரித்து வருகிறது. கரோனா தொற்றும் அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் நேற்று 1,155 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. தமிழகம் முழுவதும் இதுவரை கரோனா பாதித்தோர் மொத்த எண்ணிக்கை 27,48,045. சென்னையில் மட்டும் இதுவரை மொத்தம் 5,62,990 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகம் முழுவதும் இதுவரை தொற்றிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 27,03,799.
இதனிடையே, முதல்வர் ஸ்டாலின் உத்தரவின்படி தமிழகத்தில் 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை நேரடி வகுப்புகள் கிடையாது; திரையரங்குகளில் 50% பார்வையாளர்களுக்கு மட்டுமே அனுமதி, திருமணம், துக்க நிகழ்வுகளில் 100 பேருக்கு மட்டுமே அனுமதி எனப் பல்வேறு கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்துள்ளன.
இதுகுறித்துப் பேட்டி ஒன்றில் தமிழக சுகாதாரத்துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறும்போது, “தமிழகத்தில் ஒமைக்ரான் பரவ வாய்ப்பு உள்ளதால் மக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். ஒமைக்ரான் பரவுவதால் அதிக தளர்வுகள் அளிக்க தமிழக அரசு விரும்பவில்லை. ஒமைக்ரான் பாதித்தவர்களில் பலர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படவில்லை. அவர்களுக்கு கரோனா கவனிப்பு மையத்தில் சிகிச்சை அளிக்கப்படுகிறது” என்று தெரிவித்தார்.