கூட்டணி அமையவில்லை; வதந்திகளை நம்பாதீர்: தேமுதிக

கூட்டணி அமையவில்லை; வதந்திகளை நம்பாதீர்: தேமுதிக
Updated on
1 min read

தேமுதிக கட்சியைப் பற்றியும், விஜயகாந்த் பற்றியும் வரும் வதந்திகளை யாரும் நம்பவேண்டாம் என்று அக்கட்சியின் கொள்கை பரப்பு செயலாளர் சந்திரகுமார் எம்.எல்.ஏ கூறியுள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''தமிழக சட்டமன்றத்துக்கு தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுவிட்டது.

தமிழக மக்கள் அனைவரும் விஜயகாந்தும், தேமுதிக கட்சியும் என்ன முடிவெடுக்கப் போகிறார்கள் என்கின்ற மிகுந்த எதிர்பார்ப்போடு இருக்கிறார்கள்.

விஜயகாந்த் தன்னுடைய முடிவை அறிவிப்பதற்கு முன்பே, ஒரு சிலரால் திட்டமிட்டு பல்வேறு வதந்திகள் பரப்பப்படுகிறது. அதை பத்திரிக்கைகளும், தொலைக்காட்சிகளும் செய்திகளாக வெளியிடுகின்றன.

அந்த வதந்திகளில், ஒரு கட்சியுடன் 59 தொகுதிகள் பேசி முடித்துவிட்டதாகவும், மற்றொரு கட்சியுடன் ரகசியமாக பேசிக்கொண்டு இருப்பதாகவும், பலகோடி ரூபாய் பணம் கைமாறிவிட்டதாகவும், பேரத்தை அதிகரிக்கவே விஜயகாந்த் அமைதியாக இருக்கிறார் என்றும், கற்பனைக்கே எட்டாத வகையில், பல மாதிரி வதந்திகள் பரப்பப்படுகிறது.

ஆனால் இந்த நொடி வரையிலும் தலைவர் விஜயகாந்த் யாரிடமும் கூட்டணியைப் பற்றி பேசவே இல்லை என்பதுதான் உண்மை. தமிழக சட்டமன்ற தேர்தல் குறித்து எந்த முடிவானாலும் விஜயகாந்த் அறிவிப்பது மட்டுமே தேமுதிகவின் உண்மையான நிலைப்பாடாக இருக்கும்.

தேமுதிக என்ற கட்சியை 2005ல் ஆரம்பித்து இத்தனை ஆண்டுகாலம், பல்வேறு இடையூறுகளுக்கு மத்தியில், இந்த அளவிற்கு கட்சியை வளர்த்தவருக்கு தேமுதிகவை எப்படி கொண்டுசெல்லவேண்டும் என்பது தெரியாதா?

மக்களின் நலன் கருதி அவர் எடுக்கும் எந்தவொரு தைரியமான முடிவும், நல்ல முடிவாகவே இருக்கும். அந்த நல்ல முடிவை தேமுதிக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மட்டுமல்ல, தமிழக மக்களும் அதை ஏற்றுக்கொள்வார்கள்.

எனவே, விஜயகாந்தைப் பற்றியும், எங்கள் தேமுதிக கட்சியைப் பற்றியும் வரும் வதந்திகளை யாரும் நம்பவேண்டாம்'' என்று சந்திரகுமார் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in