Published : 01 Jan 2022 08:55 AM
Last Updated : 01 Jan 2022 08:55 AM

அதிக வழக்குகள் பதிவு செய்ததில் 2-வது ஆண்டாக வேலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு பிரிவு தொடர்ந்து முன்னணி: லஞ்சம் கேட்கும் அதிகாரிகள் மீது தைரியமாக புகாரளிக்க வேண்டுகோள்

வேலூர்

தமிழக லஞ்ச ஒழிப்புத் துறையில் வடக்கு மண்டல அளவில் வேலூர் மாவட்ட பிரிவு சிறப்பாக செயல்பட்டு தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக அதிக வழக்குகளை பதிவு செய்து முன்னணியில் உள்ளனர்.

அரசு நிர்வாகத்தில் ‘ஊழல் ஒழிப்பு’ என்பது சவால் நிறைந்த பணியாக இருந்து வருகிறது. அரசின் திட்டங்களை நிறைவேற்றவும், நிர்வாகத்தை வெளிப்படைத்தன்மை யுடன் செயல்படுத்த வேண்டிய அதிகாரிகள் பலர் தங்களுக்கான பணியை செய்யவே லஞ்சம் பெறுவது வாடிக்கையாகி வருகிறது. இதனால், அரசு நிர்வாகத்தில் கோப்புகள் தேங்குவது அரசின் மீதான மக்களின் நம்பிக்கையை குலைக்கும் செயலை ஒடுக்க லஞ்ச ஒழிப்புத்துறை மாநில அளவில் இயங்கி வருகிறது.

இதில், தமிழகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை சென்னை, வடக்கு, மேற்கு, மத்திய, தெற்கு மண்டலங் களுடன், சிறப்பு பிரிவு ஒன்றும் என இயங்கி வருகிறது. இதில், வடக்கு மண்டலத்தில் இடம் பெற்றுள்ள வேலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்புப் பிரிவு கடந்த இரண்டு ஆண்டுகளாகவே சிறப்பாக செயல்பட்டு வருகிறது. கடந்த 2018-ம் ஆண்டில் 13 வழக்குகள், 2019-ல் 20 வழக்குகள், 2020 மற்றும் 2021-ல் தலா 23 வழக்குகள் பதிவு செய்து வடக்கு மண்டலத்தில் மட்டுமில்லாது மாநில அளவிலும் முன்னணியில் உள்ளனர். கடந்த ஆண்டில் காஞ்சிபுரம் 13, திருவள்ளூர் 4, கடலூர் 16, தி.மலை 9, விழுப்புரம் மாவட்ட பிரிவு 4 வழக்கு களை பதிவு செய்துள்ளன.

2021-ம் ஆண்டு வேலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்புப் பிரிவுக்கு மிகச் சிறப்பாகவே கடந்து சென்றதுடன் மாநில அளவில் சிறப்பான செயல்பாட்டுக்கான பாரட்டையும் பெற்றுள்ளனர். 2020-ம் ஆண்டில் வேலூர் மண்டல இணை முதன்மை மாசு கட்டுப்பாட்டு வாரிய தலைமை பொறியாளர் பன்னீர்செல்வம் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் ரூ.3.60 கோடி ரொக்கம், சுமார் மூன்றரை கிலோ தங்க நகைகள், பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்து ஆவணங் களையும் பறிமுதல் செய்தனர்.

இதன் தொடர்ச்சியாக 2021-ம் ஆண்டு வேலூரில் பொதுப்பணித் துறை மண்டல தொழில்நுட்ப கல்வி செயற்பொறியாளர் ஷோபனாவிடம் இருந்து கணக்கில் வராத பணம் ரூ.20 லட்சம் மற்றும் ஓசூரில் உள்ள அவரது வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் ரூ.2.07 கோடி ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது. முன்னதாக முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் கணக்கில் வராத பணம், முறைகேடாக பதுக்கி வைக்கப்பட்ட மணல் குவியல்களுடன் வெளிநாட்டு டாலர்கள், ஏராளமான சொத்து ஆவணங்களையும் பறிமுதல் செய்தனர். வேலூர் மாவட்ட பிரிவில் கடந்த 3 ஆண்டுகளாக ஒரே சோதனையில் கோடிக்கணக்கில் பணம் சிக்குவது குறிப்பிடத்தக்கது. வடக்கு மண்டலத்தில் தொடர்ச்சியாக இரண்டாவது ஆண்டாக அதிக வழக்குகளை பதிவு செய்து முன்னணி யில் உள்ளனர்.

இது தொடர்பாக வேலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் கூறும்போது, ‘‘அரசு நிர்வாகத்தில் ஊழலை ஒழிப்பதில் எங்களைவிட மக்களுக்கு அதிக பங்கு இருக்கிறது. கடந்த ஆண்டில் பதிவு செய்த 23 வழக்குகளில் 2 வழக்கில் மட்டும் அரசு அதிகாரிகள் லஞ்சம் வாங்கும்போது சிக்கியுள்ளனர். கடமையை செய்ய லஞ்சம் எதிர்பார்த்தால் எங்களிடம் வந்து தைரியமாக புகார் கொடுக்க லாம்.

கடந்த ஆண்டு வேலூர் பிரிவினர் பதிவு செய்த 23 வழக்குகளில் மட்டும் சுமார் 2.65 கோடிக்கு ரொக்கமாக பறிமுதல் செய்துள்ளோம். வழக்க மாக லஞ்சம் வாங்கும் அதிகாரிகள் மட்டும் கைது செய்வது வழக்கம். ஆனால், கடந்த ஆண்டில் சுகாதார மேற்பார்வையாளருக்கு லஞ்சம் கொடுத்ததாக குடியாத்தம் உணவக உரிமையாளர் மற்றும் வேலூர் கற்பகம் சூப்பர் மார்க்கெட் மேலாண் இயக்குநருக்கு லஞ்சம் கொடுத்ததாக பிரபல தனியார் சோப்பு நிறுவன மேலாளர் என இரண்டு பேர் மீதும் வழக்குப்பதிவு செய்துள்ளோம். இனி லஞ்சம் கொடுத்தாலும் வழக்குப்பதிவு செய்வோம்’’ என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x