Published : 31 Dec 2021 03:54 PM
Last Updated : 31 Dec 2021 03:54 PM

இலங்கையில் இந்திய மீனவர்கள் கண்ணியத்துடன் நடத்தப்படுவதை மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும்: உயர் நீதிமன்றம்

ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகம் | கோப்புப் படம்.

மதுரை: இலங்கையில் கைதான மீனவர்களை பொங்கலுக்கு முன்பு இந்தியா அழைத்து வர மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும் என்று உயர் நீதிமன்றம் மதுரைக் கிளை நம்பிக்கை தெரிவித்துள்ளது. மேலும், இலங்கை அரசால் கைது செய்யப்படும் இந்திய மீனவர்கள் கண்ணியத்துடனும், மனிதாபிமானத்துடனும் நடத்தப்படுவதை மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளது.

கடந்த 19-ஆம் தேதி இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 68 பேர், 12 நாட்கள் ஆகியும் விடுவிக்கப்படாத நிலையே தொடர்வது தமிழகத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பல்வேறு தலைவர்கள் தொடர்ந்து குரல் கொடுத்தும் மத்திய அரசுத் தரப்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்ற தகவலே பெறப்பட்டு வருகிறது. ஆனால், இது கடலோர மீனவர்கள் மத்தியில் ஆழ்ந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நேற்று முன்தினம் மதுரை உயர்நீதிமன்றக் கிளை இதுதொடர்பான வழக்கு ஒன்றை விசாரித்தபோது, இலங்கை கடற்படை கைது செய்த 68 தமிழக மீனவர்கள் மீட்பு நடவடிக்கைகள், புத்தாண்டுக்கு முன்பு மீனவர்கள் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும் வகையில் இருக்க வேண்டும் என உயர் நீதிமன்றம் கூறியது. இந்நிலையில், மீனவர்களை பொங்கல் பண்டிகைக்கு முன்பு இந்தியா அழைத்து வர மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும் என நீதிமன்றம் நம்புவதாக உயர் நீதிமன்ற கிளை நீதிபதிகள் இன்று தெரிவித்தனர்.

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டு அங்குள்ள சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்கள் 68 பேரையும் விடுதலை செய்யக் கோரி ராமநாதபுரம் மோர்பண்ணையை சேர்ந்த வழக்கறிஞர் தீரன் திருமுருகன், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல மனு தாக்கல் செய்துள்ளார். அதில், 'மருத்துவ பரிசோதனை என்ற பெயரில் 68 மீனவர்களின் உடல் முழுவதும் கிருமி நாசினி தெளித்துள்ளனர். இது அப்பட்டமான மனித உரிமை மீறல். எனவே மீனவர்கள் அனைவரையும் பத்திரமாக மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும்' எனக் கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் சி.வி.கார்த்திகேயன், எஸ்.ஸ்ரீமதி அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. மத்திய அரசு தாக்கல் செய்த பதில் மனுவில், இலங்கையில் கைது செய்யப்பட்டுள்ள 68 மீனவர்களில் 2 பேர் சிறுவர்கள். மீனவர்கள் அவர்களின் குடும்பத்துடன் தொலைபேசியில் பேசுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 68 மீனவர்களையும் விரைவில் இந்தியா அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது எனக் கூறப்பட்டிருந்தது.

இதையடுத்து நீதிபதிகள், ''கைதானவர்களுக்கு கரோனா பரிசோதனை நடத்த வேண்டும் என்றால், அவர்களை தனிமைப்படுத்தி பரிசோதனை செய்து கொள்ளலாம். மீனவர்கள் உடல் முழுவதும் கிருமி நாசினி தெளிப்பது மனிதாபிமானமற்ற செயலாகும். இலங்கை அரசால் கைது செய்யப்படும் இந்திய மீனவர்கள் கண்ணியத்துடனும், மனிதாபிமானத்துடனும் நடத்தப்படுவதை மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும். மீனவர்களை அவர்களின் குடும்பத்தினருடன் தொலைபேசியில் பேச செய்வதற்கான நடவடிக்கை பாராட்டுக்குரியது. மத்திய அரசு தூதரக நடவடிக்கைகளை விரைவுபடுத்தி பொங்கல் பண்டிகைக்கு முன்பு மீனவர்களை இந்தியா அழைத்து வர நடவடிக்கை எடுக்கும் என நீதிமன்றம் நம்புகிறது'' என்றனர்.

பின்னர் அடுத்த விசாரணையை ஜன.7-ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x