Published : 31 Dec 2021 08:42 AM
Last Updated : 31 Dec 2021 08:42 AM

சென்னை திடீர் மழையை முன்கூட்டியே கணிக்காதது ஏன்?- வானிலை ஆய்வு மைய இயக்குநர் விளக்கம்

சென்னை: சென்னையில் கடந்த ஒரு மாதமாக மழை ஓய்ந்திருந்த நிலையில் நேற்று (டிச.30) எதிர்பாராத வகையில் பெய்த திடீர் கனமழையால் மாநகரின் பல்வேறு பகுதிகள் வெள்ளத்தில் மிதக்கின்றன.

இந்நிலையில் வானிலை ஆய்வு மையம் இது குறித்து எவ்வித முன்னறிவிப்பும் வெளியிடாதது மக்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது.

சமூக வலைதளங்களில் பலரும் இது தொடர்பாக கேள்விகளை எழுப்பினர்.

இந்நிலையில், கனமழை தொடர்பாக முன்னறிவிப்பு வெளியிடப்படாதது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் நா.புவியரசன், ‘இந்து தமிழ் திசை’ நாளிதழிடம் கூறுகையில், "வட தமிழகம் அருகே வளிமண்டல சுழற்சி நிலவி வந்தது. அது தமிழக கரையை நெருங்கும் வேகமும் காலை 5.30 மணி வரை குறைவாகவே இருந்தது. அதனால், 31-ம் தேதி அதிகாலை மழை பெய்யும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், சில மணி நேரங்களில் வானிலையில் மாற்றம் நிகழ்ந்து வளிமண்டல சுழற்சி சென்னையை நெருங்கியது. அதனால், கடலோரப் பகுதியில் உள்ள இடங்களில் சில மணி நேரத்தில் மழை கொட்டி தீர்த்துவிட்டது. இந்த மழை மேகங்கள் அதிக உயரத்திலும் இல்லை. சுமார் 3 கி.மீ. உயரத்திலேயே இருந்தன. இதுபோன்ற வானிலை நிகழ்வுகளை முன்கூட்டியே கணிப்பது சிரமம். இன்றும் சென்னையில் மழை நீடிக்க வாய்ப்புள்ளது" என்று கூறியுள்ளார்.

மழையளவு: நேற்று மாலை வரை விட்டுவிட்டு பெய்து வந்த நிலையில், 4 மணிக்குமேல் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கனமழை கொட்டித் தீர்த்தது. மாலை 4 மணி நிலவரப்படி நுங்கம்பாக்கத்தில் 3 செ.மீ., எம்ஆர்சி நகரில் 9 செ.மீ, மழை பெய்திருந்தது. 6.30 மணிக்கு நுங்கம்பாக்கத்தில் 14 செ.மீ., எம்ஆர்சி நகரில் 18 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. இரண்டரை மணி நேரத்தில் நுங்கம்பாக்கம் பகுதியில் 11 செ.மீ., எம்ஆர்சி நகரில் 9 செ.மீ. மழை கொட்டி தீர்த்திருப்பது குறிப்பிடத்தக்கது. இரவு 8.30 மணி நிலவரப்படி எம்ஆர்சி நகரில் 20 செ.மீ., நுங்கம்பாக்கத்தில் 18 செ.மீ., மீனம்பாக்கத்தில் 13 செ.மீ. மழை பதிவாகி இருந்தது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x