

முதல்வரின் நன்மதிப்பைக் குறைக்கும் வகையில் பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி ஆகியோர் வரும் ஜூன் மாதம் நீதிமன்றத்தில் ஆஜராகும்படி சம்மன் அனுப்ப சென்னை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்தாண்டு நவம்பர் 2-ம் தேதி சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே காங்கிரஸ் கட்சி சார்பில் மதுவிலக்கை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் தமிழத்தில் மது விற்பனை செய்யப்படுவது குறித்து பேசினார். இந்தப் பேச்சு முதல்வர் ஜெயலலிதாவின் நன்மதிப்பைக் குறைக்கும் வகையில் இருப்பதாகவும், உள் நோக்கத்துடன் பேசியதாகவும் அரசு கருதுகிறது. எனவே, அவரை அவதூறு சட்டத்தின் கீழ் தண்டிக்க வேண்டும் என்று கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் முதல்வர் சார்பில் சென்னை மாநகர அரசு வழக்கறிஞர் எம்.எல்.ஜெகன் அண்மையில் அவதூறு வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை நேற்று விசாரித்த அமர்வு நீதிமன்ற நீதிபதி ராஜமாணிக்கம், இவ் வழக்கில் வரும் ஜூன் 9-ம் தேதி நேரில் ஆஜராகும்படி ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனுக்கு சம்மன் அனுப்ப உத்தரவிட்டார்.
இதுபோல கடந்தாண்டு நவம்பர் 2-ம் தேதி சென்னை வேளச்சேரியில் நடந்த பொதுக் கூட்டத்தில் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பேசியது தொடர்பாக அவரை அவதூறு சட்டத்தின் கீழ் தண்டிக்க வேண்டும் என்று சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் முதல்வர் சார்பில் சென்னை மாநகர அரசு வழக்கறிஞர் எம்.எல்.ஜெகன் அவதூறு வழக்கு தொடர்ந்தார். இவ்வழக்கில் வரும் ஜூன் 8-ம் தேதி நேரில் ஆஜராகும்படி ஆர்.எஸ்.பாரதிக்கு சம்மன் அனுப்ப அமர்வு நீதிமன்ற நீதிபதி ராஜமாணிக்கம் உத்தரவிட்டார்.