Published : 31 Dec 2021 08:42 AM
Last Updated : 31 Dec 2021 08:42 AM

ராமேசுவரம் விசைப்படகு மீனவர்களின் வேலைநிறுத்தம் வாபஸ்: ரயில் மறியல் போராட்டம் தள்ளிவைப்பு

ராமேசுவரம்

ராமேசுவரம் விசைப்படகு மீனவர்கள் வேலைநிறுத்தத்தைத் திரும்பப் பெற்றனர். இதையடுத்து இவர்கள் ஜன.3 முதல் மீன் பிடிக்க கடலுக்கு செல்லவுள்ளனர்.

ராமேசுவரம் மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற தென்னரசு, லியோன், பீட்டர் கருப்பையா உள்ளிட்ட 6 பேருக்குச் சொந்தமான விசைப்படகுகளையும், அதில் இருந்த 43 மீனவர்களையும், மண்டபம் மீன்பிடித் துறைமுகத்தில் இருந்துகடலுக்குச் சென்ற சபரிதாஸ்,அருளானந்தம் ஆகியோருக்குச் சொந்தமான 2 விசைப்படகுகளையும், அதில் இருந்த 12 மீனவர்களையும் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக இலங்கை கடற்படை சிறைபிடித்தது.

மேலும் புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த 2 விசைப்படகுகளையும் அதில் இருந்த மீனவர்கள் 13 பேரையும் சிறைபிடித்தனர்.

இதைத் தொடர்ந்து 68 தமிழக மீனவர்களையும் விடுதலை செய்யவும், 10 விசைப்படகுகளை விடுவிக்கவும் வலியுறுத்தி ராமேசுவரம் மீனவர்கள் டிச.20 முதல்காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். மேலும் ஆர்ப்பாட்டமும், உண்ணாவிரதப் போராட்டங்களையும் நடத்தினர். ஜன.1 அன்று ரயில் மறியல் போராட்டம் நடைபெறும் என அறிவித்துள்ளனர்.

இந்நிலையில் கைதான தமிழக மீனவர்களையும், படகுகளையும் விடுவிக்க இலங்கை அரசிடம் வலியுறுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கரிடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தினார்.

வெளியுறவுத் துறை அறிக்கை

இப்பிரச்சினையை நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் தமிழக எம்பிக்கள் டிச. 20, 21-ல் எழுப்பினர். மீனவர்கள் விவகாரம் குறித்து விவாதிக்க வேண்டும் எனக் கோரி மாநிலங்களவை திமுக குழுத் தலைவர் திருச்சி சிவா ஒத்திவைப்புத் தீர்மான நோட்டீஸ் வழங்கினார்.

இதையடுத்து தமிழக மீனவர்களை விடுவிப்பது தொடர்பாக இலங்கை அரசுடன் இந்தியத் தூதரக அதிகாரிகள் பேசி வருவதாக மத்திய அரசின் வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்சி அறிக்கையில் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ராமேசுவரம் மீனவப் பிரதிநிதிகள் இடையே பேச்சுவார்த்தை நேற்று பிற்பகல் நடந்தது. ஆட்சியர் சங்கர்லால் குமாவத் தலைமை வகித்தார். அப்போது மீனவர்களை மீட்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுத்து வருகிறது. எனவே வேலைநிறுத்தத்தைக் கைவிட வேண்டும் எனக் கேட்டுக் கொள்ளப்பட்டது.

ஆட்சியர் சங்கர்லால் குமாவத் உறுதி அளித்ததன்பேரில் மீனவர்கள் வேலைநிறுத்தத்தை வாபஸ் பெறுவது எனவும், ஜனவரி 3-ம்தேதி (திங்கட்கிழமை) முதல்மீண்டும் கடலுக்குச் செல்வதாகவும், ரயில் மறியல் போராட்டத்தை தள்ளி வைப்பதாகவும் அறிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x