Published : 30 Dec 2021 02:57 PM
Last Updated : 30 Dec 2021 02:57 PM

புத்தாண்டில் வாகனங்களுக்குத் தடை; கோயில்களில் தரிசனமா?-குளறுபடியான உத்தரவுகள்: தினகரன் விமர்சனம்

அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் | கோப்புப் படம்.

சென்னை: புத்தாண்டில் ஒருபக்கம் வாகனப் போக்குவரத்துக்குத் தடை விதித்துவிட்டு இன்னொரு பக்கம் கோயில்களில் தரிசனம் என்பதா என்று அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

தமிழக டிஜிபி சைலேந்திரபாபு புத்தாண்டுக் கொண்டாட்டம் குறித்து நேற்று எச்சரிக்கை விடுத்தார். அதில், ''புத்தாண்டுக் கொண்டாட்டத்தின்போது கண்ணியமற்ற மற்றும் அநாகரிகமான செயல்களில் ஈடுபடுவோர், பைக் ரேஸ் உள்ளிட்ட ஆபத்தான செயல்பாடுகளில் ஈடுபடுகின்றவர்கள் மீது காவல்துறையினர் தகுந்த நடவடிக்கை எடுப்பார்கள். மது அருந்திவிட்டு வாகனங்களை ஓட்டக்கூடாது. 31.12.2021 அன்று இரவு காவல்துறையினரின் வாகன சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மது அருந்திய ஓட்டுநர்கள் கைது செய்யப்படுவர். அவர்களின் வாகனம் பறிமுதல் செய்யப்படும்'' என்று கூறியிருந்தார்.

இந்நிலையில் அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு இன்று செய்தியாளர்களிடம் கூறுகையில், ''புத்தாண்டு நள்ளிரவு அன்று கோயில்களில் மக்கள் சாமி தரிசனம் செய்யத் தடையில்லை'' என்று தெரிவித்தார்.

அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் இதுகுறித்து இன்றைய தனது ட்விட்டர் பதிவில் கூறியதாவது:

''நாளை (31.12.2021) இரவு 12 மணிக்கு மேல் சென்னையில் வாகனப் போக்குவரத்திற்கு டிஜிபி தடை விதிக்கிறார்; அதே நாளில் நள்ளிரவு 12 மணிக்கு மேல் கோயில்களில் மக்கள் தரிசனம் செய்யலாம் என அறநிலையத்துறை அமைச்சர் சொல்கிறார். இன்னொரு பக்கம் பெட்ரோல், டீசலை ஜி.எஸ்.டி.க்குள் கொண்டுவர முடியாது என்கிறார் தமிழக நிதியமைச்சர்; நிதியமைச்சர் கூறுவது அவரது தனிப்பட்ட கருத்து என்கிறார் ஆளும் திமுகவின் நாடாளுமன்றக் குழுத்தலைவர். தமிழக அரசு நிர்வாகத்தில் என்னதான் நடக்கிறது? குளறுபடிகளின் உச்சமாக இருந்த பழனிசாமி கம்பெனியின் நிர்வாகத்திற்கும் இப்போதைய ஸ்டாலின் ஆட்சிக்கும் பெரிய வித்தியாசமில்லை''.

இவ்வாறு டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x