Published : 30 Dec 2021 01:07 PM
Last Updated : 30 Dec 2021 01:07 PM

ஜார்க்கண்ட் முன்னுதாரணம்; பெட்ரோல், டீசல் விலையைத் தமிழக அரசு குறைக்க வேண்டும்: மக்கள் நீதி மய்யம்

மநீம தலைவர் கமல்ஹாசன் | கோப்புப் படம்.

சென்னை: பெட்ரோல், டீசல் விலையைத் தமிழக அரசு குறைக்க வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் வலியுறுத்தியுள்ளது.

இந்தியாவில் இரு ஆண்டுகளாக பெட்ரோல், டீசல் கடுமையான விலையேற்றத்தைச் சந்தித்து வருகின்றன. ஒரு லிட்டர் விலை ரூ.100-ஐக் கடந்த நிலையில் வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் தொடர்ந்து அவதிக்குள்ளாகி வருகின்றனர். இதில் இரண்டுவிதமான கருத்துகள் தொடர்ந்து பேசப்பட்டு வருகின்றன. ஒன்று ஜிஎஸ்டி வரிச்சுமை. ஒன்று ஒபெக் நாடுகள் கச்சா எண்ணெய் விலையை உயர்த்தியது.

ஜிஎஸ்டி வரிச்சுமை ஒருபக்கம், இன்னொரு பக்கம் மக்களைப் பற்றிக் கவலைப்படாத மத்திய அரசே பெட்ரோல், டீசல் விலைக்குக் காரணம் என எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வந்தன. இதனை மறுத்த மத்திய அரசு, இதற்கு மாநில அரசும் பொறுப்பு என்று கைகாட்டியது. அதனைத் தொடர்ந்து மாநில அரசுத் தரப்பில் விதிக்கப்படும் ஜிஎஸ்டி வரியைக் குறைப்பது பற்றி யோசிக்கலாம் எனப் பலரும் கூறத் தொடங்கினர். திமுக தனது அறிக்கையில் பெட்ரோல் விலையில் 3 ரூபாய் குறைப்பதாகவும் அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், தற்போது ஜார்க்கண்ட் மாநிலத்தில் இருசக்கர வாகனத்திற்கு பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.25 குறைக்கப்படும் என அம்மாநில முதல்வர் ஹேமந்த் சோரன் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளது நாட்டையே திரும்பிப் பார்க்க வைத்துள்ளது.

இதுகுறித்து தனது ட்விட்டர் தளத்தில் மநீம கூறுகையில், ''தேர்தல் வாக்குறுதியின்படி பெட்ரோல் விலையில் முழுமையாக 5 ரூபாய் குறைக்காத திமுக அரசு, இருசக்கர வாகனத்திற்கான பெட்ரோல் விலையை 25 ரூபாய் வரை குறைத்துள்ள ஜார்க்கண்ட் அரசை முன்னுதாரணமாகக் கொண்டு தமிழகத்திலும் பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்க வேண்டும் என மக்கள் நீதி மய்யம் வலியுறுத்துகிறது!'' என்று தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x