Last Updated : 30 Dec, 2021 06:18 AM

 

Published : 30 Dec 2021 06:18 AM
Last Updated : 30 Dec 2021 06:18 AM

அரசு பள்ளிகளில் மோசமான நிலையில் உள்ள 3,030 கட்டிடங்களை அகற்றிவிட்டு புதிதாக கட்ட ரூ.2,892 கோடி செலவாகும்: பொதுப்பணித் துறை பொறியாளர்களின் ஆய்வறிக்கையில் தகவல்

தமிழகத்தில் 1,058 அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் மோசமான நிலையில் உள்ள 3,030 கட்டிடங்களை இடித்து அகற்றி, புதிய கட்டிடம் கட்டவும் பழுது நீக்கவும் ரூ.2,892 கோடி செலவாகும் என கணக்கிடப்பட்டுள்ளது.

திருநெல்வேலியில் அண்மையில் அரசு உதவி பெறும் சாப்டர் மேல்நிலைப் பள்ளியின் கழிவறை சுவர் இடிந்து விழுந்ததில் 3 மாணவர்கள் உயிரிழந்தனர். 5 மாணவர்கள் காயங்களுடன் சிகிச்சைபெற்று வருகின்றனர். இதையடுத்து தமிழகம் முழுவதும் உள்ள அரசுப்பள்ளிக் கட்டிடங்களின் ஸ்திரத்தன்மை குறித்து விரைவாக ஆய்வுநடத்த தமிழக அரசு உத்தரவிட்டது.

அதன்படி, அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் கொடுத்த தகவலின்பேரில் பொதுப்பணித் துறை பொறியாளர்கள், மாநிலத்தில் 1960-ம் ஆண்டு முதல் 1990-ம் ஆண்டு வரையிலான காலக்கட்டத்தில் கட்டப்பட்ட பள்ளி கட்டிடங்களை ஆய்வு செய்து, அதன் தன்மை குறித்து அறிக்கை தயாரித்துள்ளனர். இதில், அதிகபட்சமாக விழுப்புரம் மாவட்டத்தில் 256 பள்ளிக் கட்டிடங்களும், குறைந்தபட்சமாக தூத்துக்குடி மாவட்டத்தில் 5 பள்ளிக் கட்டிடங்களும் உடனடியாக இடிக்க வேண்டிய நிலையில் இருப்பது தெரியவந்துள்ளது.

இதுகுறித்து பொதுப்பணித் துறை உயர் அதிகாரிகள் கூறி யதாவது:

தமிழக பொதுப்பணித் துறை, 906 அரசு உயர்நிலைப் பள்ளிகள், அரசு மேல்நிலைப் பள்ளிகளில் உள்ள சுமார் 6,500 கட்டிடங்களைப் பராமரித்து வருகிறது. இப்பள்ளிக் கட்டிடங்களின் ஸ்திரத்தன்மை குறித்து ஆய்வு செய்தோம். அதில், உடனடியாக இடிக்க வேண்டிய கட்டிடங்கள், இடித்த இடத்தில்புதிய கட்டிடங்கள் கட்டுவது,தேவைப்படும் இடங்களில் புத்தம்புதிய கட்டிடங்கள் கட்டுவது, இருக்கின்ற கட்டிடங்களில் பழுது நீக்குவது என 4 பிரிவுகளாக ஆய்வுமேற்கொள்ளப்பட்டது.

அதன்படி, 38 மாவட்டங்களில் 1,058 பள்ளிகளில் உள்ள 3,030 கட்டிடங்களை உடனே இடித்து அகற்ற வேண்டியுள்ளது. இதற்கு மட்டும் ரூ.4 கோடியே 59 லட்சம் ஆகும். அவ்வாறு இடிக்கப்பட்ட இடங்களில் 936 வகுப்பறைகள், உயர்நிலைப் பள்ளிகளில் 19 ஆய்வுக்கூடம், மேல்நிலைப் பள்ளிகளில் 43 ஆய்வுக்கூடம், 170 கழிப்பறைகள், குடிநீர் மேல்நிலைத் தொட்டி, பொருட்கள் இருப்பு வைக்கும் அறைகள் உள்ளிட்டவை கட்டுவதற்கு ரூ.248 கோடியே 15 லட்சம் செலவாகும்.

உயர்நிலைப்பள்ளிகளை மேல்நிலைப்பள்ளிகளாக தரம் உயர்த்தியது உள்ளிட்ட காரணங்களால் 1,661 பள்ளிகளில் ரூ.2,377 கோடியில் புதிதாக கட்டிடங்கள் கட்டப்பட வேண்டியுள்ளது. 2,044 பள்ளிகளில் ரூ.263 கோடியில் பழுதுநீக்கும் பணிகளை மேற்கொள்ள வேண்டும். இந்த நான்குகட்டப் பணிகளைச் செய்து முடிக்கமொத்தமாக ரூ.2,892 கோடி செலவாகும் என்று மதிப்பிடப்பட்டுள் ளது. இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x