Published : 30 Dec 2021 08:03 AM
Last Updated : 30 Dec 2021 08:03 AM

திருவொற்றியூரில் கட்டிட இடிபாடுகளை அகற்றும் பணி தீவிரம்- அனைத்து வீடுகளையும் இடிக்க கோரிக்கை: இடத்தின் உறுதி தன்மையை ஆராயும் அண்ணா பல்கலைக்கழக வல்லுநர்கள்

திருவொற்றியூரில் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்பு பகுதியில் இடிந்த வீடுகளை அகற்றும் பணி நேற்று தொடங்கியது. அனைத்து குடியிருப்புகளையும் இடித்துவிட்டு, அனைவருக்கும் புதிய வீடுகள் ஒதுக்குமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருவொற்றியூர் கிராமத் தெரு பகுதியில் 336 வீடுகள் இடம்பெற்ற நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்பு வளாகம் உள்ளது. இதில் ஒரு குடியிருப்பில் இருந்த 28 வீடுகள் கடந்த 27-ம் தேதி திடீரென இடிந்தன. முன்கூட்டியே பொதுமக்கள் வெளியேற்றப்பட்டதால் உயிர்ச்சேதம் ஏதும் ஏற்படவில்லை.

இந்த குடியிருப்புடன் ஒட்டியுள்ள 20 வீடுகளைக் கொண்ட குடியிருப்பும் இடிந்து விழும் நிலையில் உள்ளதால், அவற்றில் வசித்து வந்தவர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். இந்த 48 வீடுகளில் வசித்து வந்தவர்கள் அனைவரும் அருகில் உள்ள திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு மாநகராட்சி சார்பில் 3 வேளையும் உணவு, குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.

இடிந்த வீடுகளின் கட்டுமான கழிவுகளை அகற்றும் பணி நேற்று தொடங்கியது. இடிபாடுகளில் சிக்கியிருந்த சிலிண்டர்கள் தீயணைப்புத் துறை மூலமாக பாதுகாப்பாக மீட்கப்பட்டன. கட்டுமானங்களை அகற்றும்போது அதிர்வு ஏற்படும் என்பதால், அருகில் உள்ள அனைத்து பொதுமக்களும் வெளியேற்றப்பட்டனர். இப்பணிகள் நிறைவுற்றதும் அதை ஒட்டியுள்ள கட்டிடத்தையும் இடிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

அந்த வளாகத்தில் உள்ள அனைத்து வீடுகளுமே இடியும் நிலையில் இருப்பதாகக் கூறி, அவற்றில் வசிக்கும் மக்கள் தங்கள் உடைமைகளுடன் வீடுகளை விட்டு வெளியேறி திறந்த வெளியில் கடந்த இரு நாட்களாக வசித்து வருகின்றனர். இவர்களில் ஒரு சாரார் அனைத்து வீடுகளையும் இடித்து விட்டு, இதே பகுதியில் வீடு கட்டித் தருமாறும், ஒரு சாரார் உடனடியாக மாற்று வீடு வழங்குமாறும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இதனிடையே அண்ணா பல்கலைக்கழக சிவில் பொறியியல் துறை தலைவர் ஜெயா தலைமையிலான வல்லுநர்கள் கட்டிடம் இடிந்த பகுதியில் இடத்தின் உறுதித் தன்மை குறித்த ஆய்வை நேற்று தொடங்கினார். இதில் இவர்கள் சேகரிக்கும் தகவல்களை அரசிடம் அளிக்க உள்ளனர்.

நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய அதிகாரிகளிடம் கேட்டபோது, இங்கேயே வீடு கட்டி வழங்குவதா, தயார்நிலையில் உள்ள வீட்டை ஒதுக்குவதா, இப்பகுதியில் உள்ள இதர குடியிருப்புகளில் சீரமைப்பு பணிகள் மட்டும் செய்வதா அல்லது அனைத்தையும் இடித்துவிடுவதா என்பது குறித்து அரசு முடிவெடுத்து அறிவிக்கும் என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x