Last Updated : 29 Dec, 2021 06:53 PM

 

Published : 29 Dec 2021 06:53 PM
Last Updated : 29 Dec 2021 06:53 PM

68 மீனவர்கள் கைது விவகாரம்; புத்தாண்டுக்கு முன்பு மீனவர்கள் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவ வேண்டும்: உயர் நீதிமன்றம் விருப்பம் 

உயர் நீதிமன்றம் மதுரைக் கிளை | கோப்புப் படம்.

மதுரை: இலங்கை கடற்படை கைது செய்த 68 தமிழக மீனவர்கள் மீட்பு நடவடிக்கைகள், புத்தாண்டுக்கு முன்பு மீனவர்கள் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும் வகையில் இருக்க வேண்டும் என உயர் நீதிமன்றம் கூறியுள்ளது.

கடந்த 19ஆம் தேதி இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 68 பேர் இன்னமும் விடுவிக்கப்படாத நிலையே தொடர்வது தமிழகத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பல்வேறு தலைவர்களும் தொடர்ந்து குரல் கொடுத்தும் மத்திய அரசுத் தரப்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்ற தகவலே பெறப்பட்டு வருகிறது. ஆனால், இது கடலோர மீனவர்கள் மத்தியில் ஆழ்ந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் மீனவர்களைக் கைது செய்திருப்பது கச்சத்தீவு ஒப்பந்தத்திற்கு எதிரானது, அவர்களை உடனே விடுதலை செய்ய வேண்டும் என்று உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து ராமநாதபுரம் மோர்பண்ணையைச் சேர்ந்த ஜி.திருமுருகன் என்ற தீரன் திருமுருகன், உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனு:

''நெடுந்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 68 பேரை இலங்கை கடற்படையும், கடலோரக் காவல் படையும் கைது செய்துள்ளது. இது 1974 கச்சத்தீவு ஒப்பந்தத்துக்கு எதிரானது. கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் இலங்கையில் பல்வேறு மனித உரிமை மீறலுக்கு ஆளாக்கப்பட்டுள்ளனர். இலங்கை கடற்படை மற்றும் இலங்கை கடலோரக் காவல் படையால் கடந்த 34 ஆண்டுகளாக தமிழக மீனவர்கள் கொல்லப்பட்டும், தாக்கப்பட்டும் வருகின்றனர்.

இந்திய மீனவர்களுக்குப் பாதுகாப்பான சூழல் நிலையை ஏற்படுத்துவது மத்திய அரசின் கடமையாகும். எனவே, இலங்கை கடற்படை, கடலோரக் காவல் படையால் கைது செய்யப்பட்ட 68 தமிழக மீனவர்களையும், பறிமுதல் செய்யப்பட்ட 10 படகுகளையும் விடுவிக்க உத்தரவிட வேண்டும்''.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

இந்த மனு நீதிபதிகள் சி.வி.கார்த்திகேயன், எஸ்.ஸ்ரீமதி அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.

தமிழக அரசு சார்பில், ''68 மீனவர்களையும் விடுதலை செய்வது தொடர்பாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சரிடம் தமிழக முதல்வர் பேசியுள்ளார். மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது'' எனத் தெரிவிக்கப்பட்டது.

மத்திய அரசு சார்பில், ''தமிழக மீனவர்களை மீட்க மத்திய அரசு ராஜதந்திர நடவடிக்கைகளைக் கையாண்டு வருகிறது. அந்த விவரங்களைத் தெரிவிக்க அவகாசம் வேண்டும்'' எனத் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, ''கைது செய்யப்பட்டுள்ள மீனவர்கள், அவர்கள் குடும்பத்தில் புத்தாண்டுக்கு முன்பு மகிழ்ச்சி நிலவும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த விவகாரத்தில் தற்போதைய நிலை தொடர்பாக மத்திய அரசு டிச.31-ம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்'' என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x